தீவிர வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படை- ஆவணங்களுடன் பணம் எடுத்துச் செல்ல மக்களுக்கு அறிவுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதைத் தொடர்ந்து பறக்கும் படையினர் இரவு பகலாக வாகனச் சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களுடன் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல பொது மக்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வாகனங்களில் கணக்கில் வராத பணம் எடுத்துச்செல்வது, ஆயுதங்கள், மதுபாட்டில்கள் எடுத்துச்செல்வது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர் களை தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை முற்றிலும் தடுப்பதற்காக சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல்கள் நடப்பது பற்றி தகவல் கிடைத்தால், இந்த பறக்கும் படையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபடுகின்றனர்.
அரசியல் கட்சியினர், வாக் காளர்களுக்கு இலவசங்கள் கொடுக்க முயற்சிப்பதை தடுக்க ஒவ்வொரு தொகுதியிலும் தலா 3 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
எழும்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வேப்பேரி போலீஸ் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட 6 பகுதிகளில் நேற்று வாகன சோதனை நடந்தது. அதேபோல் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி, மயிலாப்பூர் சட்டசபை தொகுதி உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாகன சோதனை நடத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அதிகாரிகள் இடத்தை மாற்றிக்கொண்டு சோதனையில் ஈடுபடுகின்றனர்.
இந்த சோதனையின் போது வீடியோ மூலம் நிகழ்வுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சந்தேகப்படும் படியான எந்த பொருளும் இதுவரை சிக்கவில்லை. ரூபாய் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை யாராவது எடுத்துச் சென்றால், அவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையேல் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும்.
பொதுமக்களும், வியாபாரிகளும் முறையான ஆவணத்தோடு பணம் எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து வரும் நாட்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications