விபத்துகளை தவிர்க்கும் புதிய ரக ரயில் பெட்டிகள் அறிமுகம்!
நெல்லையில் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு புதிய ரக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை: நெல்லையில் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு புதிய ரக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிக்கு ஏற்ப பல்வேறு தொழில்நுட்பங்களை கையாண்டு புதிய ரயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது. சாதாரணமாக தற்போது புழக்கத்தில் உள்ள ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டு புதிய எல்ஹெச் பி ரயில் பெட்டிகள் ஒவ்வொரு எக்ஸ்பிரசிலும் புகுத்தப்பட்டு வருகிறது.

நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவில் எல்ஹெச் பி கோச்சுகளுடன் இணைக்கப்பட உள்ளது. சாதாரண பெட்டிகளில் ஒரு கோச்சில் 72 இருக்கைகள் இருப்பது வழக்கம். புதிய பெட்டிகளில் 80 இருக்கைகள் இருக்கும்.
பெட்டியின் நீளம் சாதாரண பெட்டியின் நீளத்தை விட கூடுதலாக இருக்கும். பழைய பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டிக்கும் இடையில் ஸ்குரூ கூப்ளிங் வைத்து இணைப்பு வழங்கப்பட்டிருக்கும். இதில் ரயில் விபத்தில் சிக்கும் போது அதன் பின்னால் வரும் கோச்சுகளும் ஒன்றின் பின் ஒன்றாக மோதிக் கொள்ளும்.
ஆனால் புதிய ரக பெட்டிகளில் பெட்டிகளுக்கு இடையே சிபிசி கப்ளிங் இணைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ரயில் பெட்டி தடம் புரண்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ அதற்கு பின்னால் வரும் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவது தவிர்க்கப்படும்.
இத்தகைய ரயில் பெட்டிகள் தற்போது சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. திருவனந்தபுரம் கோட்டத்தில் வரும் நாட்களில் இத்தகைய ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பெட்டிகள் சென்னையில் இருந்து நெல்லைக்கு கொண்டு வரப்பட்டு தற்போது தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில்பெட்டிகளை பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications