வெள்ளக்காடாக மாறிய கடலூர்.. 10 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; மக்கள் பரிதவிப்பு!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழைக்கு பல இடங்கள் வெள்ளத்தால் மிதந்து கொண்டிருக்கின்றன. ஒரு மாத காலத்துக்குள் 3 வது கனமழையை கடலூர் மாவட்டம் சந்தித்துள்ளது. ஏற்கனவே பெய்த மழையினால் பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது. கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் அனைத்து பகுதிகளிலும் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
கடலூர், நெல்லிக்குப்பம், கோண்டூர், பண்ருட்டி, நெய்வேலி, ஊ.மங்கலம் பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் இங்கு இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று காலை வரை 8 ஆயிரம் பேர் வெள்ள பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெள்ளம் ஏற்படலாம் என கருதப்படும் 40 இடங்களில் தயார் நிலையில் மீட்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் நீச்சல் வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலைமை மோசமாக இருப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து 200 தீயணைப்பு வீரர்கள் கடலூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நன்கு நீச்சல் தெரிந்த மீனவர்களும் வெள்ளப் பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிகள் நிரம்பி உடைவதை தடுக்கவும், வெள்ளம் பாதித்தால் அந்த இடத்தில் இருந்து உடனடியாக தண்ணீரை வெளியேற்றவும் 40 ஜே.சி.பி. எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கன மழையில் கடலூர் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளம் நீர் தேங்கி உள்ளது. சில இடங்களில் மார்பு அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது.
பீமாராவ் நகர், அருந்ததிநகர், சுத்துக்குளம், நவநீத நகர், வில்வராய நத்தம், கூத்தப்பாக்கம், பாதிரிகுப்பம், பணங்காட்டு காலனி, கோண்டூர், மஞ்சகுப்பம், கடலூர் முதுநகர் ஆகிய இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கடலூர் நகரில் மட்டும் 10 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
இதனால் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் பரப்பிலான அனைத்து விவசாயப் பயிர்களும் நாசமாகிப் போய்விட்டன. கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தற்போது அடுத்த 48 மணிநேரத்துக்கு நிலைமை மேலும் மோசமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் கடலூரின் கதி மிக மோசமாகிவிடும் என்றே கூறப்படுகிறது












Click it and Unblock the Notifications