சென்னையில் படிப்படியாக வெள்ளம் வடியத் தொடங்கியது... ஆனாலும் மழை தொடர்கிறது
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் அடையாற்றில் வௌ்ளம் குறையத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஜாபர்கான் பேட்டை, கேகேநகர், சிஐடிநகர் , அ.சோக்நகர் சைதாப்பேட்டை பகுதிகளில் புகுந்த வெள்ள நீர் வடியத்துவங்கியுள்ளது. எனினும் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் மீட்புப்பணிகளில் சிக்கல் உருவாகியுள்ளது.
சென்னையில் திங்கட்கிழமை பெய்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ளநீர் ஆறுகளில் கட்டுக்கடங்காமல் பாய்ந்து குடியிருப்புகளை கபளீகரம் செய்தது. இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கோட்டூர் புரம், சைதாபேட்டை, கே.கே.நகர், அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல் பகுதிகள் குட்டிக்குட்டித்தீவுகளாக மாறின. மீட்பு குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர். மொட்டை மாடியில் தஞ்சமடைந்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
நீர் திறப்பு குறைப்பு
சென்னையில் கனமழை சற்றே ஓய்ந்து சாரல்மழையாக மாறியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியி்ல் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால் புதன்கிழமை போல இல்லாமல் 3அடி அளவிற்கு அடையாற்றில் வௌ்ள நீரின் அளவு குறைந்துள்ளது.
புதன்கிழமையன்று காலை விநாடிக்கு 30000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமையன்று விநாடிக்கு 5000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வடிந்து வரும் வெள்ளம்
இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளம் குறைந்துள்ளது. சைதாப்பேட்டை பாலத்தில் இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. கே.கே. நகர் பாரதிதாசன் காலனியில் 13 அடி அளவிற்கு பாய்ந்த நீர் தற்போது 4 அடியாக குறைந்துள்ளது. சாரல் மழை பெய்து வருவதால் மீட்புபணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தவிக்கும் மக்கள்
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் உணவு பொருட்கள் மற்றும் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். மேலும் ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்படும் பொருட்கள் அனைத்து பகுதிகளுக்கும் வழங்காமல் குறைவான பகுதிகளில் குறைவான உணவு பொருட்கள் வழங்கி வருவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
4000 பேர் மீட்பு
வெள்ளம் காரணமாக வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கித் தவித்த 4000க்கும் மேற்பட்ட மக்களை ராணுவம் காப்பாற்றியுள்ளது. வெள்ளத்தால் கட்டிடங்களின் கீழ் தளம் மூழ்கியதால் மக்கள் முதல் மற்றும் 2வது தளத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களை மீட்க ராணுவமும், தேசிய பேரிடர் மீட்பு குழுவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலையில் தஞ்சம்
வெள்ளநீதில் சிக்கி மீட்கப்பட்ட ஏராளமானோர் சாலைகளின் ஓராங்களில் தஞ்சமடைந்துள்ளனர். மீண்டும் மழை பெய்யத்தொடங்கியுள்ளதால் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிவாரண முகாம்களை பலரும் தேடி வருகின்றனர். பல இடங்களில் சாலைகளில் பரிதவிப்புடன் காத்திருப்பவர்களை காண முடிகிறது.












Click it and Unblock the Notifications