வாடைக் காற்றோடு கை கோர்த்த மழை... வீட்டிற்குள் முடங்கிய சென்னை மக்கள்!
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென் மேற்கு வங்க கடலில் இலங்கை கடற்கரை பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த பகுதியும், தென்கிழக்கு வங்க கடலில் அந்தமானுக்கு அருகே உருவான குறைந்த காற்றழுத்த நிலையும் ஒன்றாக இணைந்து விட்டதால், காற்றழுத்த தாழ்வு வலுவடைந்து புயல் சின்னமாக மாறும். எனவே 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, நேற்று முதல் தமிழகத்தின் பல இடங்களில் பரவலான மழையும், சில இடங்களில் மேகமூட்டமும் காணப்படுகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது.
கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, அடையாறு, பெசன்ட் நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் தாம்பரம், மீனம்பாக்கம், நங்கநல்லூர், பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடற்கரைக்கு அருகில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும் என எதிர்பார்ப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் வாடைக்காற்று வீசி வரும் நிலையில் தற்போது மழையும் சேர்ந்துள்ளதால் மக்கள் வெளியே செல்ல அஞ்சி வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.