திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை.. சென்னையில் வெறும் கருமேகம் மட்டுமே!
சென்னை: சென்னையில் இன்று மாலையில் பலத்த காற்றுடன் கருமேகங்கள் சூழ்ந்ததால் பலத்த மழை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் இடி காற்று மற்றும் லேசான தூறலுடன் மழை போய் விட்டது.
அதேசமயம், திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக நல்ல வெயில் அடித்து வருகிறது. கத்திரி வெயில் முடிந்து விட்டபோதிலும் வெயில் தொடர்ந்து கொளுத்துவதால் மக்களின் புழுக்கம் குறையாமலேயே உள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. குளிர் காற்றும் வீசத் தொடங்கியது. வானம் கருத்துக் காணப்பட்டதால் கன மழை வருமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர். சென்னை நகரிலும், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த காற்றும் வீசியது.
இருப்பினும் வெறும் இடி, பலத்த காற்று மற்றும் லேசான தூறலுடன் பெரிய மழை வராமல் மக்களை ஏமாற்றி விட்டது. இருப்பினும் இந்த திடீர் மாற்றத்தால் வெட்கை தணிந்து குளுமை குடியேறியது.
இதற்கிடையே, திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி, பழவேற்காடு, கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து அப்பகுதி மக்களை குளிர்வித்தது.