தொடர்மழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வடமேற்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. நேற்று லேசான வெயிலும், பின்னர் மழையும் என சென்னையில் வானிலை மாறி மாறிக் காணப்பட்டது. ஆனால், மாலை முதல் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

இரவில் பெய்த மழை காலையிலும் பல இடங்களில் தொடர்ந்தது. சென்னை கிண்டி, வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம், தாம்பரம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியாளர் சுந்தரவள்ளி அறிவித்துள்ளார்.
இதேபோல், குமரி மாவட்டத்திலும் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.

செமஸ்டர் தேர்வுகளில் மாற்றமில்லை :
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதும், திட்டமிட்டபடி இன்று செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி உறுப்புக் கல்லூரிகளிலும் இன்று செமஸ்டர் தேர்வு நடைபெறும் என துணைவேந்தர் தாண்டவன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்திலும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என பதிவாளர் கணேசன் அறிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளிலும் இன்று தேர்வு நடைபெறுகிறது
ஆனால், சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு, நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications