'வருண ஜபத்துக்கு' கைமேல் பலன் - மதுரை, விருதுநகரில் மழை கொட்டியது!
மதுரை: மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் இந்தாண்டு மழை அளவு குறைவாக உள்ளது. இதனால் கோடையின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. மழை பெய்ய வேண்டி திருநெல்வேலி நெல்லையப்பர் உட்பட தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இரு நாட்களுக்கு முன்பு, வருண ஜபம் நடத்தப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்தாமரை குளத்தில் சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தி மழை வேண்டினர். நந்தி குளிர்விக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி தீர்த்தது.
நெல்லை மாவட்டம், தேனி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
அருப்புக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக குறிப்பிடும்படி மழை பெய்துள்ளது. சரியாக பிற்பகல் 1.45 மணிக்குப்பிறகு திடீரெனக் கூடிய மேகங்கள் இடி மின்னலுடன் மழையாகப் பொழிந்துள்ளன.
இதில் சென்ற செவ்வாய்கிழமை சுமார் அரை மணிநேரத்தில் 37 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நேற்று பகல் 2 மணிக்கு சாரல் மழையாக ஆரம்பித்து தொடர்ந்து இரவு 9 மணிவரை சாரல் மழை பெய்தது. இந்த மழை 7 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் வற்றி்ப்போயிருந்ததாலும், நதியில் தண்ணீர் இன்றியும் விளைபயிர்களை வைத்து வாடிய விவசாயிகளுக்கு இந்த கோடை மழை மனதை குளிர்விப்பதாக இருந்தது.
கோடை வெயிலின் தாக்கத்தால் புழுக்கத்தில் அவதிப்பட்ட மக்களுக்கும் இந்த மழை மகிழ்ச்சியை கொடுத்தது.












Click it and Unblock the Notifications