தமிழகத்தில் நீடிக்கும் வெப்பச்சலனம்- இன்றும் மழை பெய்ய வாய்ப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் ஓரிரு இடங்களில் லேசான மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால் அதே சமயம் தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தின் வடக்கு பகுதியிலும், ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களிலும் தீவிரம் அடைந்துள்ளது.
இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நிலவும் வானிலை குறித்து சென்னை வானிலை மையம், "தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில தினங்களாகவே நல்ல மழைபெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்துள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டங்களில் தமிழகத்தில் 32 செ.மீ மழைப்பொழிவு பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் தற்போது இயல்பு நிலையை விட 4 சதவீதம் குறைவாகவே மழைப்பொழிவு பதிவாகி இருக்கிறது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில், மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளது.