கனமழை... சேலத்தில் மின்னல் தாக்கி 10ம் வகுப்பு மாணவர் பலி
சேலம்: சேலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையின் போது, மின்னல் தாக்கி பத்தாம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில், நேற்று சேலம் மாவட்டத்திலும் பல இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது, ஓமலூரை அடுத்த டேனிஸ்பேட்டை லோக்கூர் கிராமத்தில், தென்னை மரம் அருகே ஒதுங்கிய பத்தாம் வகுப்பு மாணவரான ஜெயராஜ் (15) மீது மின்னல் தாக்கியது. இதில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
ஜெயராஜ் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர். இந்தாண்டு அவர் தொழில்கல்வி சார்ந்த உயர்படிப்பு படிக்க முயற்சித்து வந்ததாகத் தெரிகிறது. அதற்குள்ளாக மின்னல் தாக்கி அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.