சென்னையை வாட்டி வதைக்கும் வெயில்- தூத்துக்குடிக்கு கருணை காட்டிய வருண பகவான்
சென்னை : சென்னை உள்ளிட்ட தமிழத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகின்ற நிலையில் தூத்துக்குடியில் நேற்று மழை பெய்து மக்களைக் குளிர்வித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் நேற்று சுமார் 45 நிமிடங்கள் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. கழுகுமலையில் சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், புதன்கிழமை மாலை 6 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணிக்கு இடி, மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இம் மழை சுமார் 45 நிமிடம் நீடித்தது.
இதே போல, உதகமண்டலம், தேனி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பதிவாகியுள்ளது. இதே போல, குமரி மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ஆனைக்கிடங்கில் 111 மி.மீ. மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.