கனமழையால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் வெள்ளம்- வாகன ஓட்டிகள் அவதி!
திருச்சி: தமிழகத்தில் நேற்று விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் தென்மாவட்ட மக்கள் கடும் அவதி அடைந்தனர். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் பெரும் அவதிக்குள்ளாகின.
தென்மேற்கு வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும் மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான குளங்களும் நிரம்பி வருகின்றன. சில குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. நேற்று பெய்த இந்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
தஞ்சையில் நேற்று அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இதேபோன்று தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் நெல் வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வடியவிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சம்பா, தாளடி சாகுபடி விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
நாகையில் நேற்று காலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக இந்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நாகையில் தொடரும் மழையால் விவசாயிகளும், மீனவர்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வேதாரண்யம் அருகே பலத்த மழையால் புதுமனை புகுவிழாவுக்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் இருந்து மின்சாரம் தாக்கி சமையல் தொழிலாளி ஒருவர் இறந்தார். மேலும் மழை காரணமாக வேதாரண்யத்தில் உப்பளங்கள் நீரில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூரில் நேற்று காலையில் தொடங்கிய மழை மாலை வரை நீடித்தது. திருவாரூரை அடுத்த கொரடாச்சேரி அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியை சேர்ந்த வீரையன் என்பவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் பலியானார்.
திருச்சியில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய மழை பகல் 12 மணி வரை இடைவிடாமல் பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. புதுக்கோட்டை, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பூர் மாவட்டங்களில் நேற்று காலை முதல் பரவலாக அடை மழை பெய்தது. இதனால் அம்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம், மயிலம், கள்ளக்குறிச்சி, விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை என மாவட்டம் முழுவதும் காலை முதல் இடைவிடாமல் கொட்டித்தீர்த்த மழையால் விழுப்புரம்-சென்னை, விழுப்புரம்-திருச்சி, விழுப்புரம்-புதுச்சேரி பிரதான சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன. தொடர் மழைகாரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 2 இடங்களில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் காயம் அடைந்தனர்.