தீவிரமடையும் பருவமழை... சாலைகளில் வெள்ளம்... பொதுமக்கள் அவதி!
சென்னை: வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் மழை தீவிரமடைந்துள்ளது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கும், குமரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் மழை...
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 38 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையாலும் மேட்டூர் அணையின் நீரைக்கொண்டும் நெல் சாகுபடியை முழுமையாக செய்ய முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, தஞ்சை, கல்லணை, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நாகை, திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று மழை பெய்தது.

நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு...
திண்டுக்கல் மாவட்டம் பழனி, வேடசந்தூர், சத்திரப்பட்டி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் கொடைக்கானல் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

ஓட்டு வீடுகள் சேதம்...
திருச்சி மாவட்டதில் நேற்று விட்டுவிட்டு லேசாக மழை பெய்தது. கரூரில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் கரூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த 39 ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது.

மிதமான மழை...
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், ஓசூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

பலத்த மழை...
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாகக் காணப்பட்டது. அதிகாலை முதல் பல இடங்களில் தூறலுடன் தொடங்கி பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

குற்றாலம்...
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குற்றாலம் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருவதால் அருவிகளில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுகிறது.

விமான சேவை பாதிப்பு...
தூத்துக்குடியில் மழை காரணமாக மோசமான வானிலை நேற்று காலையில் சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் தூத்துக்குடியில் தரையிறங்க முடியாமல் மதுரைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. பின்னர், அந்த விமானத்தில் பயணம் செய்த 71 பேரும் வாகனங்கள் மூலம் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர். அதேபோன்று தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்ல தயாராக இருந்த 55 பயணிகளும் மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றனர்.

விவசாயி பலி...
குமரி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது. ஆரல்வாய்மொழி அருகே உள்ள தாழக்குடி பகுதியில் விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி உடல் கருகினார்.

மலை ரயில் தாமதம்...
நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழைகாரணமாக ஊட்டி மலை ரயில் பாதையில் கல்லாறு-அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் மலை ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் தண்டவாளத்தில் கிடந்த மரம் அகற்றப்பட்டு, 2 மணி நேரம் தாமதமாக மலை ரயில் புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications