திண்டுக்கல்லில் கொட்டும் மழையிலும் போராட்டம்.. பெண்களும் குழந்தைகளும் கூட அசையவில்லை!
திண்டுக்கல் கல்லறைத் தோட்டத்தில் கொட்டும் மழையிலும் மக்கள் போராடி வருகின்றனர். நகரின் பல பகுதிகளிலிருந்தும் கிராமங்களிலிருந்து மக்கள் குவிந்து வருகின்றனர்.
திண்டுக்கல்: தமிழகத்தின் பல பகுதிகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் மிகவும் வலுவடைந்து வருகிறது. ஐந்தாவது நாளாக திண்டுக்கல்லில் பெய்யும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டத்தில் தணியாத ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
திண்டுக்கல் கல்லறைத் தோட்டத்தில் ஐந்தாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று அங்கு மழைபெய்து வரும் நிலையிலும் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அங்கேயே கலையாமல் நின்றுகொண்டு போராடி வருகின்றனர். சிலர் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்ய மொட்டை அடித்து வருகின்றனர்.
திண்டுக்கல் நகரிலும் வெளிக்கிராமங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக வந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு தங்கள் ஆதரவளித்த தெரிவித்து வருகின்றனர். மேலும், போராட்டக்காரர்களுக்கு உள்ளுர் சமூக நல அமைப்புகளும் பொதுமக்களும், உணவும் நீரும் வழங்கி வருகின்றனர். அடாத மழையிலும் குழந்தைகளும் பெண்களும் அசையாது போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.