வாவ் வானம்.. தமிழகம் முழுவதும் பொத்துக்கிட்டு ஊத்துது.. விவசாயிகள் செம ஹேப்பி!
தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் மதுரை, தேனி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆடிப்பட்டம் தேதி விதைத்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தெலங்கானா முதல் குமரி வரை உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சற்று வலுவிழந்துள்ளது.தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
வானிலை மையம் கணித்தது போலவே சென்னை தொடங்கி மதுரை, தேனி, கிருஷ்ணகிரி,வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை
தமிழகத்தில் இது தென்மேற்கு பருவமழை காலமாகும். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அணைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நடப்பாண்டு தமிழகம் முழுவதும் 22.1 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வெப்பச்சலனம்
இந்நிலையில், வெப்பச்சலனம் மற்றும் கடற்காற்றின் திசையைப் பொறுத்து, கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். காலை முதலே வெயில் சுள்ளென அடித்த நிலையில் மாலையில் சட்டென்று வானிலை மாறியது.
|
கே கே நகரில் கனமழை
சென்னை கே.கே.நகர், கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, கீழ்ப்பாக்கம், எழும்பூர், மயிலாப்பூர், மந்தைவெளி உள்பட சென்னையின் பல பகுதிகளில் சுமார் அரைமணி நேரம் கனமழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்தது.
மதுரையில் மழை
மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதேபோல தேனிமாவட்டம் ஆண்டிபட்டியில் கனமழை பெய்தது. ஓசூரில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது
திருப்பூரிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
கனமழை பெய்து நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருவதால் நடப்பாண்டு விவசாயம் செழிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குடிநீர் பஞ்சம் தீரும் என்று பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.