தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை.. தருமபுரியில் ஆலங்கட்டி மழை.. மக்கள் மகிழ்ச்சி!
Recommended Video
சென்னை: தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. கத்தரி வெயிலும் கூட சேர்ந்துள்ளதால் மாநிலம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது.
ஆனால் அவ்வப்போது ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. இருப்பினும் வெயில் குறைந்தபாடில்லை. அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் மழை
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று பிற்பகலுக்குப் பிறகு நல்ல மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இரும்பேடு, சேவூர், பையூர் உள்ளிட்ட ஊர்களில் பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலத்தில் மழை
சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கருமந்துறை மணியார்குண்டம், தேக்கம்பட்டு, பகுடுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

திருவள்ளூரில் சூறைக்காற்றுடன்..
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை வெளுத்து வருகிறது. செவ்வாய்ப்பேட்டை, திருவூர், உள்ளிட்ட இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

தருமபுரியில் ஆலங்கட்டி மழை
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு, காஞ்சி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடலூரில் மழை
இதேபோல் கடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்தமழை பெய்து வருகிறது. சிறுபாக்கம், அடரி, கொளவாவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications