நள்ளிரவில் தியானம்.. எடப்பாடிக்காக சிறப்பு பூஜை நடத்திய ராஜேந்திர பாலாஜி!
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள கோவிலில் நள்ளிரவில் தியானம் செய்து சிறப்பு பூஜையில் ஈடுபட்டுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நள்ளிரவில் தியானம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. பாஜக - அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையலாம் எனக் கூறப்படுகிறது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, கூட்டணி ஆட்சி தொடர்பான விவாதங்களும் சூடுபிடித்துள்ளன. பாஜகவினர், கூட்டணி ஆட்சி அமையும் எனக் கூறி வரும் அதே சமயத்தில், கூட்டணி ஆட்சி கிடையாது, முழுமையாக அதிமுக தலைமையிலான ஆட்சி தான் என அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக திடீரென நள்ளிரவில் தியானம் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்ட, ஶ்ரீவில்லிப்புத்தூர் சரபேஸ்வர் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சென்ற ராஜேந்திர பாலாஜி, அங்கு சிறிது நேரம் தியானம் மேற்கொண்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ராஜேந்திர பாலாஜியின் இந்த திடீர் பூஜை, தியானம் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசி இருந்த ராஜேந்திர பாலாஜி, அதிமுகவை எதிர்க்கும் தைரியமும் துணிச்சலும் திமுகவுக்கு கிடையாது. அதிமுகவிற்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே கிடையாது. எடப்பாடி பழனிசாமி இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் துளிர்விட்டால் அங்கு எடப்பாடியார் இருக்க மாட்டார்.
ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னைச் சிறையிலடைக்க முயற்சி செய்கிறார்கள். அது நடக்கவே நடக்காது. நான் யாரையும் ஏமாற்றி மோசடி செய்யவில்லை. திமுகவை நாட்டை விட்டு விரட்டும் வரை நான் ஓயமாட்டேன். கூட்டணி ஆட்சி என்று யார் சொன்னது?. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி நடக்கும். பெருவாரியான சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக தலைமையில்தான் ஆட்சி அமையும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிக்கு மேல் திமுக வெற்றி பெறாது. பிரபாகரனுக்கு நிகரான வீரம் உள்ளவர் எடப்பாடி பழனிசாமி. மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள், அதை மொத்தமாக அள்ளுவதற்குத் தொண்டர்கள் பாடுபட வேண்டும்" எனப் பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications