ஜெ.மறைவு செய்தி டிச.4-ஆம் தேதி மாலை 5.20 மணிக்கே எனக்கு கிடைத்தது.. பகீர் கிளப்பும் ராஜேந்திர பாலாஜி
ஜெயலலிதா மறைவு செய்தி எனக்கு டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 5.20 மணிக்கே கிடைத்துவிட்டது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
Recommended Video

விருதுநகர்: ஜெயலலிதா மறைவு செய்தி எனக்கு டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 5.20 மணிக்கே தெரிந்துவிட்டது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகீர் கிளப்பியுள்ளார்.
மன்னார்குடியில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பேசிய சசிகலா சகோதரன் திவாகரன் கூறுகையில் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதியே இறந்துவிட்டார். அப்பல்லோ மருத்துவமனைகளின் பாதுகாப்பு கருதி ஒரு நாள் தாமதமாக வெளியிட்டனர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை ஜெயக்குமார் மறுத்தார்.
இந்நிலையில் விருதுநகரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி தெரிவிக்கையில், கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி எனக்கு அவரது இறப்பு செய்தி வந்துவிட்டது. அன்றைய தினம் மாலை 5.20 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து எனக்கு வேண்டப்பட்ட ஒருத்தர் போன் செய்தார்.

சீரியஸாக உள்ளார்
அப்போது முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. ரொம்பவும் சீரியஸாக உள்ளார் என்றார். பதறி அடித்துக் கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு போன் செய்தேன். யாரும் எடுக்கவில்லை. ஜெயலலிதாவின் தனிப்பட்ட செயலாளர் பூங்குன்றனுக்கு போன் செய்தால் அவரும் எடுக்கவில்லை.

ரயில் மூலம் சென்னை
எனக்கு தெரிந்தவருக்கு போன் செய்து பூங்குன்றனிடம் கொடுக்க சொன்னேன். அப்போது அவர் அழுதார். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரது நிலை மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தார். உடனே ஊரிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன்.

சந்தேகம்
அப்போது அதிகாலை 2 மணிக்கு தலைமை கழகத்திடம் இருந்து எனக்கு போன் வந்தது. அனைத்து எம்எல்ஏக்களும் உடனடியாக சென்னைக்கு வாருங்கள் என்று அழைத்தனர். அப்போதே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது.

மருத்துவ ரீதியாக...
இதையடுத்து மருத்துவமனைக்கு சென்றவுடன் ஜெயலலிதா இறந்துவிட்டதாக காலை 11 மணிக்கு எனக்கு தகவல் சொன்னார்கள். அதற்கு முன்பே அவர் மருத்துவ ரீதியாக இறந்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது என்றார் ராஜேந்திர பாலாஜி. ஜெயலலிதாவின் மரணம் ஏற்கெனவே மர்ம நிறைந்துள்ள நிலையில் இதுபோல் பகீர் தகவல்களை கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications