லஞ்சம் கேட்கும் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணையின்றி சஸ்பெண்ட்: ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை
சென்னை: லஞ்சம் வாங்கும் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை எதுவும் இன்றி உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். ஒரே நாளில் லட்சக்கணக்கான பணம் சிக்கி வருகிறது.
இந்நிலையில் இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பறக்கும்படை
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தொகுதிக்கு 3 என்கிற கணக்கில் 234 தொகுதிகளில் 702 பறக்கும் படைகள், 702 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரம் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகையை அதிகரிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணம்
ஆவணம் இன்றி ரூ.1 லட்சம் வரை எடுத்துச் செல்ல மக்களுக்கு அனுமதி அளிக்குமாறு தேர்தல் ஆணையரிடம் கேட்டுள்ளாம். நாளை அனுமதி கிடைத்துவிடும். அடுத்த மாதம் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கிய பிறகு அந்த தொகையை மீண்டும் ரூ.50 ஆயிரமாக குறைப்போம்.

தொந்தரவு
ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவாக பணம் எடுத்துச் செல்பவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று பறக்கும்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் சில அதிகாரிகள் ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவாக பணம் எடுத்துச் செல்பவர்ளுக்கு தொல்லை கொடுப்பதாக புகார் கிடைத்துள்ளது.

லஞ்சம்
சில அதிகாரிகளோ தங்களுக்கு லஞ்சம் அளித்தால் பணம் எடுத்துச் செல்ல அனுமதிப்பதாக தெரிவித்துள்ளனர் என்று வியாபாரிகள் புகார் கூறியுள்ளனர். தேவையில்லாமல் தொந்தரவு செய்யும் அதிகாரிகள் மற்றும் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை செல்போனில் படம் அல்லது வீடியோ எடுத்து 9444123456 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணையின்றி சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.

கண்காணிப்பு
பறிமுதல் செய்த பணத்தை திருப்பிக் கொடுக்க லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது ஆதாரத்துடன் புகார் அளித்தால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பறக்கும் படையினரின் வாகனங்கள் எங்கு உள்ளது, அவர்கள் எந்த இடத்தில் வாகன சோதனை நடத்துகிறார்கள் உள்ளிட்ட தகவல்கள் தலைமை செயலகம் மற்றும் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து மார்ச் 20ம் தேதி முதல் கண்காணிக்கப்படும் என்றார்.

ட்விட்டர்
வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த தேர்தல் ஆணையம் ட்விட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் ஃபேஸ்புக் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

ஃபேஸ்புக்
தமிழகத்தில் 18 வயதிற்கு மேல் உள்ள 1 கோடியே 10 லட்சம் பேர் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளனர். அவர்கள் ஃபேஸ்புக் பக்கத்திற்கு சென்றால் வாக்களிப்பதன் அவசியம், தேர்தல் செய்திகளை அறிந்து கொள்ள முடியும். இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவன தேசிய தலைமை அதிகாரி ஒரு வாரத்தில் சென்னை வர உள்ளார்.












Click it and Unblock the Notifications