சட்டசபைத் தேர்தலுக்காக தமிழகத்திற்கு 385 பார்வையாளர்கள் வருகை - ராஷேஜ் லக்கானி தகவல்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி 385 பார்வையாளர்கள் தமிழகம் வர உள்ளனர் என்று தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு வருகிற மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே சோதனை நடத்தி, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிந்து விட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி தமிழகம் முழுவதும் ஆன்லைனில் 6 லட்சத்து 55 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு மட்டும் வண்ண அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும். திருத்தம் கோரி விண்ணப்பித்தவர்கள் ரூபாய் 25 செலுத்தினால் வண்ண அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு செலவின பார்வையாளர் வீதம் 234 செலவின பார்வையாளர்களும், பறக்கும் படையில் இடம் பெறும் பயிற்சி ஐ.பி.எஸ். அதிகாரிகள் 118 பார்வையாளர்களும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பார்வையாளர் வீதம் 33 போலீஸ் பார்வையாளர்களும் 19 ஆம் தேதி தமிழகம் வருகிறார்கள். அந்த வகையில் மொத்தம் 385 மத்திய பார்வையாளர்கள் வருகிறார்கள்.
அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்து வருவதாக புகார்கள் கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதற்காக தேர்தல் அதிகாரிகள் வீடியோகிராபர்களை அழைத்துச் சென்று பொதுக்கூட்டத்துக்கு வருபவர்களிடம் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பன போன்ற விவரங்களை கேட்டு பதிவு செய்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications