ஏன் ரஜினி பற்றி தேவையில்லாம பேசுறீங்க... பிரேமலதாவுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம்
திருச்சி: நடிகர் ரஜினிகாந்த் அனைத்துக் கட்சிகளுடனும் சுமூக உறவைப் பேணி வருகிறார். அனைத்துத் தலைவர்களுடனும் தோழமையுடன் பழகி வருகிறார். இந்த நிலையில் ரஜினிகாந்த் பேசியதை வைத்து பிரேமலதா விஜயகாந்த் பேசுவது தவறு. தனது பேச்சை அவர் திரும்பப் பெற வேண்டும் என்று திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரஜினி பெயரை பிரேமலதாவோ வேறு யாருமோ பயன்படுத்தக் கூடாது என்றும் ரஜினி ரசிகர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேமுதிக சார்பில் பிரசாரத்தில் குதித்துள்ள பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், 1996-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின் போது ரஜினிகாந்த் சொன்னார், 'மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று'. அதையேதான் இப்போது நான் சொல்கிறேன் என்று பேசினார்.
இந்தப் பேச்சுத்தான் ரஜினி ரசிகர்களைக் கோபப்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருச்சி ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர் முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 1996-ம் ஆண்டு தேர்தலில் அப்போது இருந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடிகர் ரஜினிகாந்த் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதனை பிரேமலதா தற்போது கூறுவது தேமுதிக- மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்களை திருப்புவது போல உள்ளது.
தமிழக அரசியலில் அனைத்து தலைவர்களிடமும் ரஜினிகாந்த் நல்ல சுமுகமான நட்புறவை கொண்டுள்ளார். அவர்களது ரசிகர்களும் அதுபோன்று அவரது வழியில் சென்று கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் பிரேமலதா இப்படி பேசியிருப்பது அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அவர் பேசிய கருத்தை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.