ரஜினியும் கமலும் தெருவுக்கு வந்தால் தான் உண்மை நிலை தெரியும்.. துரைமுருகன் அதிரடி!
ரஜினியும் கமலும் தெருவுக்கு வந்தால் தான் உண்மை நிலை தெரியும் என்று துரைமுருகன் குறிப்பிட்டு உள்ளார்.
Recommended Video

கோவை : ரஜினியும் கமலும் தெருவுக்கு இறங்கி வந்தால் தான் உண்மை நிலை தெரியும். இப்போது அவர்கள் குறித்து எந்த கருத்தும் கூற முடியாது என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் குறிப்பிட்டு உள்ளார்.
மக்களைப்பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் வரை சுருட்டுவதிலேயே அதிமுக அரசு உள்ளது என்று கோவை விமான நிலையத்தில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் விமானம் மூலம் நேற்று கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

காஞ்சி சங்கர மட விளக்கங்கள்
காஞ்சி விஜயேந்திரருக்கு தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க உடலில் வலுவும், உள்ளத்தில் உணர்ச்சியும் இருந்திருக்கின்றது எனவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது உள்ளத்திலும் உணர்விலும் வலு இல்லாமல் போனது எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இதற்கு காஞ்சி சங்கர மடம் தரும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தமிழுக்கு காஞ்சி மட விஜயேந்திரர் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான் எனவும் தெரிவித்தார்.

ரஜினி கமல் அரசியல்
நடிகர்கள் கமல்,ரஜினி ஆகியோரின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, சினிமாவை விட அரசியல் கவர்ச்சியாக இருப்பதால் நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர் என அவர் குறிப்பிட்டார். மேலும் அவர்கள் நேரடி அரசியலுக்கு வந்த பின்னர் அவர்களுக்கு இருக்கும் மரியாதை குறித்து தெரிந்து கொள்ள முடியும் எனவும் இன்னும் அவர்கள் தெருவிற்கு வரவில்லை என்று அவர் குறிப்பிட்டார். மக்களோடு இணைந்தால் தான் அவர்கள் முழு அரசியல்வாதி ஆக முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக ஒரு மாதிரினான கட்சி
மாணவர்கள்,மக்கள், அரசியல் கட்சிகள் என பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக யார் போராடினாலும் அதை பற்றிய கவலை இந்த அரசுக்கு இல்லை எனவும், எவ்வளவு சுருட்டலாம், கொள்ளையடிக்கலாம் என்பதிலேயே அவர்கள் கவனமாக இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் பா.ஜ.க ஒரு மாதிரியான கட்சி என தெரிவித்த அவர் , அது செயல்படும் நிலையிலேயே இல்லை ஆனால், அவர்கள் பேச்சுக்கு மட்டும் குறையில்லை என்றும் நக்கலாக குறிப்பிட்டார்.

பொம்மலாட்டம் ஆடும் அமைச்சர்கள்
ஜெயலலிதா இருந்தது வரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்த அமைச்சர்களுக்கு தற்போது தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவிற்கு நடந்து கொள்கிறார்கள். டெல்லியில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு பொம்மலாட்டம் ஆடி வருகிறார்கள். இது எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை. சூழ்நிலைகள் மாறும். திமுகவிற்கு தலைமையேற்க ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்று துரைமுருகன் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications