"தமிழர்" அல்லாதவர்களின் வாக்குகளை நம்பி களம் இறங்கும் ரஜினி... 40% ஓட்டுக்கு குறியாம்!
தமிழர் அல்லாதவர் என்கிற முத்திரையால் தேர்தல் களத்தில் செம லாபமே என அரசியல் ஆலோசகர்கள் விவரித்துள்ளது ரஜினிக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
சென்னை: தமிழர் அல்லாதவர் என முத்திரை குத்தப்படுவதால் நிச்சயம் அரசியல் லாபம்தான் என நடிகர் ரஜினிகாந்தை வியக்க வைக்கும் வாக்கு வங்கி கணக்கை அவரது ஆலோசகர்கள் முன்வைத்து வருகின்றனர்.
தமிழகத்தின் அரசியல் சூழல்களை ஆய்வு செய்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இதற்காக, மாற்றுக் கட்சிகளில் இருக்கும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் மும்பையில் இருந்தபடியே மணிக்கணக்கில் விவாதம் நடத்துகிறார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் புதிய கட்சியை ரஜினி தொடங்க இருக்கிறார். தேர்தல் தொடர்பாக அவர் போடும் கணக்குகள் ஆச்சரியமளிக்கின்றன என்கின்றனர் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

அரசியல் பிரவேசம்
அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். போர் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என கடந்த மாதம் நடந்த ரசிகர்களிடையேயான சந்திப்பில், அரசியல் பிரவேசம் குறித்து பகிரங்கமாக பேசினார். இதன்பின்னர், ரசிகர் மன்ற நிர்வாகிகள் கட்டுப்பாட்டை மீறி நடந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டார்.

தீவிர ஆலோசனை
இந்நிலையில், காலா படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ள ரஜினிகாந்த், அரசியல் பயணம் குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே, தமிழகத்துக்கு சட்டசபைத் தேர்தல் வரும் என நம்புகிறார் ரஜினி. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகக் கட்சியைத் தொடங்கிவிட்டு, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதும் அவரது ஆசை.

40% வாக்குகள்
கடந்த வாரம் அவரிடம் பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், நீங்கள் கட்சியைத் தொடங்கினால், இயல்பாக 40 சதவீத வாக்குகள் கிடைக்கும் என விவரிக்க, எப்படிச் சொல்கிறீர்கள்?' எனக் கேட்டிருக்கிறார் ரஜினி. அவரிடம் தொடர்ந்து பேசியவர், தமிழ்நாட்டில் மொழிவழி சிறுபான்மை மக்கள் 10% பேர் உள்ளனர். இவர்களுக்கு அரசியலில் எந்த அங்கீகாரமும் கிடைப்பதில்லை.

நாடார், தலித்துகள்
அடுத்ததாக, தி.மு.க, அ.தி.மு.க ஆட்சியால் எந்த நன்மையும் பெறாத நாடார் சமூகத்தினர் 8% பேர் உள்ளனர். அதேபோல், தலித் சமூகத்தினர் 20% அளவுக்கு உள்ளனர்.

வன்னியர் வாக்கு
இவர்கள் உங்கள் தலைமையை ஆதரிப்பார்கள். தலித் மக்களுக்கு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு எந்த முக்கியத்துவத்தையும் திராவிடக் கட்சிகள் அளிக்கவில்லை. அரசியலில் குறிப்பிடத்தகுந்த அங்கீகாரத்தைப் பெறாத வன்னியர் சமூகத்து மக்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தால் அவர்களும் உங்கள் தலைமையை ஏற்பார்கள். இந்த வாக்குகளைக் கணக்கிட்டால், 40%க்கும் மேல் வருகிறது.

தமிழர் அல்லாதவர் முத்திரை
இந்த அளவு வாக்குகள் வந்தாலே மிகப் பெரிய வெற்றி. 'தமிழர் அல்லாதவர்' என்ற அடிப்படையில், மொழிவழி சிறுபான்மை மக்கள் உங்களை ஆதரிப்பார்கள். அனைத்து சமூகத்துக்கும் பொதுவான ஒரு தலைவராகத்தான் மக்கள் உங்களைப் பார்க்கிறார்கள். எந்த ஒரு சாதி அடையாளத்தையும் உங்களுக்குக் கொடுக்க முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதிக்குப் பிறகு உங்களுக்குத்தான் அந்த அடையாளம் கிடைக்க இருக்கிறது. உங்கள் கட்சிக்கு பேக்கிங் கம்யூனிட்டியாக தென்மாவட்டத்து நாடார் சமூகத்து மக்கள் இருப்பார்கள்' என விவரித்திருக்கிறார்.

பொதுவான தலைவர்...
இதற்குப் பதில் அளித்த ரஜினி, சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு கட்சியை வழிநடத்த வேண்டும் என விரும்புகிறேன். பொதுவான தலைவராகவே இருக்க ஆசைப்படுகிறேன் எனக் கூறியிருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கி, தேர்தலை சந்திக்கும்போது மிகப் பெரும் வெற்றியை எதிர்பார்க்கிறார் ரஜினி. அதற்கான கூட்டல், கழித்தல் கணக்குகளைத் தொடங்கியிருக்கிறார். ஆகஸ்ட் மாதத்துக்குள் அவருடைய அரசியல் பயணம் தொடங்கிவிடும்" என்கிறார்.












Click it and Unblock the Notifications