கோவையில் ரஜினி... சுவாமி தயானந்த சரஸ்வதியைச் சந்தித்தார்!
கோவை: நேற்று கோவை சென்ற ரஜினிகாந்த், தனது ஆன்மீக குருவான சுவாமி தயானந்த சரஸ்வதியைச் சந்தித்தார்.
பெங்களூரில் நடந்த லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷின் மகள் திருமணத்தில் பங்கேற்ற ரஜினி, அங்கிருந்து நேராக கோவை சென்றார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று காலை 10.45 மணிக்கு விமானத்தில் கோவை வந்தார். கோவை ஆனைகட்டியில் உள்ள ஆர்ஷ வித்ய குருகுல ஆசிரமத்திற்கு காரில் சென்றார். அங்கு சுவாமி தயானந்த சரஸ்வதியை சந்தித்தார்.
ஆசிரம வளாகத்தில் இருந்த தட்சிணாமூர்த்தி, முருகன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் தயானந்த சரஸ்வதியுடன் சில நிமிடம் தியானத்தில் ஈடுபட்டார். மதியம் 2.45 மணிக்கு காரில் பீளமேடு விமான நிலையம் வந்து விமானத்தில் சென்னை புறப்பட்டார்.
சில ஆண்டுகளுக்கு முன் ஆனைகட்டி ஆசிரமத்தில் தங்கி ரஜினிகாந்த் தியான பயிற்சி பெற்றது நினைவிருக்கலாம்.
ரஜினியின் ஆன்மிக குருவான தயானந்த சரஸ்வதி கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நல குறைவால் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
குணமடைந்த அவரைப் பார்த்து நலம் விசாரிக்கவே ரஜினி திடீரென நேற்று வந்துள்ளார். அவரது வருகைபற்றி யாருக்கும் தெரியவில்லை.
முன்னதாக கோவை விமான நிலையத்தில் ரஜினி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஆசிரமத்தில் தயானந்த சரஸ்வதியை சந்திக்க வந்தேன், வேறு ஒன்றுமில்லை'' எனக் கூறி புறப்பட்டார்.












Click it and Unblock the Notifications