அக்டோபர் 2-ம் வாரத்தில் கட்சி அறிவிக்கிறார் ரஜினிகாந்த்?
சென்னை: தமிழக அரசியல் களம் புதிய பரபரப்பைச் சந்திக்க ஆரம்பித்துள்ளது. ரஜினிகாந்தின் புதுக்கட்சி அறிவிப்பு அந்த பரபரப்பை இன்னும் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
கடந்த ஆண்டு இதே நாள் முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த 75 நாட்களும் அவர் மர்மமாகவே வைக்கப்பட்டு, பின்னர் மரணமடைந்ததாக அறிவித்தனர். அதன் பிறகு காட்சிகள் மாறின. அதிமுக உடைந்தது. ஆனால் ஆட்சியையும் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதில் குறியாக உள்ளனர் அதிமுகவினர்.

இந்த நிலையில் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறேன் என்று கூறிய ரஜினிகாந்த், தன் அரசியல் வருகையை கடந்த மே மாதம் அறிவித்தார். அந்த அறிவிப்புக்குப் பிறகு பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசை, அமைச்சர்களை ட்விட்டரில் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார் கமல் ஹாஸன். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி வந்ததும், சனி ஞாயிறுகளில் அரசியல் பேசினார் கமல். முதலில் தன்னை ஒரு அரசியல் விமர்சகனாக அறிவித்துக் கொண்டவர், இப்போது முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பல்வேறு கருத்துப் பறிமாற்றங்கள், வாதங்கள், விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ரஜினியின் அடுத்த கட்ட ரசிகர் மன்ற சந்திப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சந்திப்பை வரும் அக்டோபர் இரண்டாம் வாரம் ரஜினி நடத்துவார் எனத் தெரிகிறது. இந்த சந்திப்பின்போது நிச்சயம் ரஜினி தனது அரசியல் கட்சியின் பெயரையும் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.
கட்சியின் பெயர், அதைப் பதிவு செய்யும் நடைமுறைகளை ஏற்கெனவே தமிழருவி மணியனின் ஆலோசனையுடன் தொடங்கிவிட்டார் ரஜினிகாந்த். இப்போது கட்சிக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வது குறித்து ஆலோசித்து வருகிறார். அடுத்த இரு வாரங்களில் இந்தப் பணிகளை முடித்துவிடுவார் ரஜினி என்கிறார்கள்.
ரஜினியின் கட்சி அறிவிப்பு குறித்த இந்த தகவல்களை ரஜினி ரசிகர்கள் ஏக உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications