நான் சங்கிலி.. இனி நீங்கதான் கங்குலி.. தமிழக பாஜக தலைவராக ரஜினிக்கு 10 பொருத்தமும் பக்காவா இருக்கே!
தமிழகத்தில் பாஜகவின் தலைவராவதற்கு அனைத்து தகுதிகளும் கொண்ட நபராக நடிகர் ரஜினிகாந்த் உருவெடுத்து வருகிறார்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பாஜகவின் தலைவராவதற்கு அனைத்து தகுதிகளும் கொண்ட நபராக நடிகர் ரஜினிகாந்த் உருவெடுத்து வருகிறார். கடந்த சில நாட்களாக நடிகர் ரஜினிகாந்த் கொடுக்கும் பேட்டிகள் எல்லாம் பாஜகவின் கொள்கைகளுக்கு நேரடியாக ஆதரவு அளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.
தமிழக பாஜக தற்போது சரியான தலைமை இல்லாமல் தவித்து வருகிறது. தற்போது தமிழக பாஜக தலைவர் பதவி காலியாகி உள்ளது. தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. தெலுங்கானா ஆளுநராக தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்று இருக்கிறார்.
தமிழிசைக்கு பின் அவரை போல ஒருவர் கிடைக்கமால் கட்சியின் தேசிய தலைமை குழம்பி வருகிறது. சரியாக காவி அரசியலை தமிழகத்தில் கால் பதிக்க வைக்கும் வகையில் ஒருவரை அக்கட்சி தேடிக்கொண்டு இருக்கிறது.
Rajinikanth: "கந்து வட்டி" ரஜினி.. என்ஆர்சி விவகாரத்தை திசை திருப்புகிறார்.. தமிமுன் அன்சாரி விளாசல்
யார் எல்லாம்
இந்த தலைவர் பதவிக்காக எச். ராஜா, பி. முருகானந்தம், சி.பி ராதாகிருஷ்னன், வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் இடையில்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. விரைவில் தலைவர் யார் என்று அறிவிக்கப்படும் என்று கூறுகிறார்கள். இந்த தலைவர் பதவிக்கு மிக சரியான நபராக நடிகர் ரஜினிகாந்த் தற்போது உருவெடுத்துள்ளார். ஆம் தமிழக பாஜகவிற்கு ரஜினியை விட சரியான தலைமையை தேட முடியாது. இதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.
சப்போர்ட் செய்கிறார்
முதலாவதாக நடிகர் ரஜினிகாந்த் மத்திய பாஜக அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதை நேரடியாக ஆதரிக்கிறார். பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக தலைமையிலான தமிழக அரசின் திட்டங்களுக்கும் ரஜினி வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கிறார். சிஏஏ, என்பிஆர், 8 வழி சாலை திட்டம் என்று எதை பற்றி பேசினாலும் எந்த கவலையும் இன்றி ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்கிறார். அவரின் ஆதரவும் தமிழகம் முழுக்க வைரலாகிறது. தமிழக பாஜகவிற்கு இப்படி ஒரு முகம்தான் கண்டிப்பாக தேவை.
பெரியார் எதிர்ப்பு
அதேபோல் தமிழகத்தில் பாஜகவின் சிம்ம சொப்பனமாக இருப்பது பெரியார்தான். ஆனால் பெரியாரையே எதிர்க்க தொடங்கி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் சூடுபிடிக்க தொடங்கியதே பெரியாரின் எதிர்ப்பில் இருந்ததுதான். பெரியார் மீது கை வைக்க தமிழக பாஜக அஞ்சிக்கொண்டு இருந்தது. ஆனால் ரஜினி தைரியமாக பெரியார் குறித்து பேச தொடங்கி உள்ளார். தமிழக பாஜக இப்படி ஒருவருக்குத்தான் இத்தனை நாள் காத்து இருந்தது.
பிரபலம் எப்படி
மேலும் ரஜினிக்கு ஒரு வகையில் பிரபலமான முகம் இருக்கிறது. இவர் கருத்து சொன்னால் நாடு முழுக்க வைரலாகிறது. இரண்டு நாட்கள் அதை பற்றித்தான் மக்கள் பேசுகிறார்கள். பாஜகவில் இவ்வளவு பிரபலமாக இருக்கும் முகம் யாரும் கிடையாது. பிக்பாஸ் பிரபலங்களை எல்லாம் கட்சியில் இழுத்து போட்டு விளம்பரம் தேட நினைக்கும் பாஜக, ரஜினியை கண்டிப்பாக தங்கள் கட்சியில் சேர்க்கலாம். சரியான பிரபலமான முகம் இல்லாமல் தவிக்கும் கட்சிக்கு ரஜினி ஏற்ற முகமாக இருப்பார்.
எவ்வளவு கீழே வேண்டுமானாலும்
பொதுவாக பாஜக தலைவர்கள் எதிர்வினை பற்றி கவலைப்படாமல் கருத்து சொல்வார்கள். ரஜினியும் அதேபோல்தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து சர்ச்சையாக பேசினார். மக்கள் போராட்டத்தை சமூக விரோதிகளின் போராட்டம் என்று கூறினார். ரஜினியின் பேட்டி எல்லாமே ஒருவகையில் பாஜக தலைவர்கள் கொடுக்கும் சர்ச்சை பேட்டிகளை போன்றுதான் இருக்கிறது. ரஜினி - பாஜக இரண்டு தரப்பின் அரசியலும் ஒன்றுபடும் புள்ளி இதுதான்.
லாபி
அதேபோல் ரஜினிக்கு பின் சப்போர்ட் செய்ய பெரிய அளவில் நிறைய லாபிக்களும் இருக்கிறது. முக்கியமாக குருமூர்த்தி லாபி தொடங்கி தற்போது சுப்பிரமணியன் சுவாமி கூட ரஜினிக்கு சப்போர்ட் செய்ய தொடங்கிவிட்டனர். அமித் ஷா ரஜினியை அதிகம் நம்புகிறார். இவர்களின் சப்போர்ட் இருப்பதால் ரஜினி தைரியமாக தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்கலாம். ஆனால் ரஜினி பாஜக தலைவரானால் அதை பல தமிழக பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது.
நேரடி
இத்தனை நாட்கள் ரஜினி ஆன்மீக அரசியல் செய்ய போகிறேன் என்று குறிப்பிட்டு வந்தார். ஆனால் இப்படி மறைமுகமாக பேசி வந்தார், தற்போது நேரடியாக பாஜகவை ஆதரிக்க தொடங்கி உள்ளார். நேரடியாக பாஜகவின் கொள்கைகள் அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறார். பாஜக ஆதரவாளர்கள் சிலர் கூட சிஏஏவை எதிர்க்கும் போது, ரஜினி கொஞ்சம் கூட கவலைப்படாமல் சிஏஏவை ஆதரிக்க தொடங்கிவிட்டார்.
காவி சாயம்
திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசினார்கள். அதே போல எனக்கும் காவி சாயம் பூச பார்க்கிறார்கள். ஆனால் நான் அதில் சிக்க மாட்டேன். வள்ளுவரும் சிக்க மாட்டார், நானும் சிக்க மாட்டேன், என்று குறிப்பிட்டவர்தான் நடிகர் ரஜினிகாந்த். இப்படி ஒரே ஒரு நாள் பேசி பாஜகவை எதிர்ப்பதை போல எதிர்த்த ரஜினிகாந்த் அதன்பின் முழுக்க முழுக்க பாஜகவின் கொள்கைகளுக்குத்தான் ஆதரவாக பேசி இருக்கிறார். காவி சாயம் குறித்து ரஜினியின் கூற்று ஒரு வகையில் உண்மைதான். அவருக்கு புதிதாக யாரும் காவி சாயம் பூச வேண்டியது இல்லை. அவர் ஏற்கனவே காவி கொள்கைகளுடன்தான் இருக்கிறார்.
சங்கிலி - கங்குலி
புதிதாக அவருக்கு எதுவும் நிறம் பூச வேண்டிய அவசியம் கிடையாது. தமிழக பாஜக தலைவருக்கான அனைத்து பொருத்தங்களும் சரியாக இருக்க, பக்காவாக பொருந்தி போய் இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். வடிவேல் காமெடி ஒன்றில், நான் சங்கிலி என்று ஒரு நபர் சொன்னதும் இல்லை நீதான் எங்க கங்குலி என்று கூறி அவரை கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொள்வார். அதேபோல் ரஜினியையும் பாஜக தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்ளலாம்.. இனிமேல் உங்கள் கொள்கை என்னவென்று கேட்டால், தலை சுற்றி கீழே விழாமல்.. வலதுசாரித்துவம்தான் என் கொள்கை என்று ரஜினி தைரியமாக சொல்லலாம்!