ரசிகர்களுடன் நாளை ரஜினிகாந்த் சந்திப்பு... "தலைவர்" என்ன சொல்ல போகிறார்?
ரஜினிகாந்த் நாளை ரசிகர்களை சந்திக்கிறார். அப்போது அவர் என்ன சொல்ல போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
சென்னை: ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சியை தொடங்குவார் என்ற அறிவிப்பை நாளை ரசிகர்களுடனான சந்திப்பில் அவர் வெளியிடவுள்ளதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வருமாறு பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர் போருக்கு தயாராக இருக்குமாறு ரசிகர்களை அறிவுறுத்தினார்.
இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். போர் புரிய எப்போது அழைப்பார் என்று மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் ரஜினி தனது பிறந்தநாள் அன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் அவர் அறிவிக்கவில்லை. இதையடுத்து நாளை முதல் இந்த மாதம் 31-ஆம் தேதி வரை ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். மேலும் நாளை செய்தியாளர்கள் சந்திப்பும் கூட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் நாளை ரஜினி எப்போது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என்ற தேதியை நிச்சயம் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்நிலையில் அவர் தனது அரசியல் கட்சியை வரும் 2018-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி தொடங்குவார் என்று தகவல்கள் கூறுகின்றன.
எது எப்படியோ இந்த மாதம் முழுவதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத மாதமாகவே இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.