வாயே திறப்பதில்லை என்ற புகாரிலிருந்து தப்பிக்க ரஜினி திட்டம்.. உண்ணாவிரதம் இருக்க ஆலோசனையாம்!
நதிநீர் இணைப்புக்காக உண்ணாவிரதம் இருந்தது போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடிகர் ரஜினிகாந்த் விரைவில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : நதிநீர் இணைப்புக்காக உண்ணாவிரதம் இருந்தது போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடிகர் ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து டெல்டா மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. தமிழக அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, எனினும் விவசாயிகளின் ஜீவாதார பிரச்னை என்பதால் போராட்டங்களை பொறுத்துக் கொண்டுள்ளனர்.
ஆளும் அதிமுக ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த நிலையில் திமுக தனது தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து தொடர்ந்து 5 நாட்களாக சாலை மறியல், ரயில் மறியல், உண்ணாவிரதம் என பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.
கமல் கண்டன பொதுக்கூட்டம்
கடந்த பிப்ரவரி மாதத்தில் புதிதாக அரசியல் கட்சி தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் திருச்சியில் நேற்று கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தினார். இந்த போராட்டத்தை காவிரி போராட்டம் என்றும் அறிவித்தார்.
நடிகர் சங்கம் போராட்ட அறிவிப்பு
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 8ம் தேதி தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த அறவழிப்போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி ஆதரவு
இந்த போராட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளார். எனினும் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ள ரஜினி காவிரி விவகாரத்தில் மவுனமாக இருப்பதை அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
ரஜினி மீதான விமர்சனங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று ஒரு பதிவை மட்டுமே ரஜினி போட்டார். ஆனால் அதற்கு பின்னர் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ரஜினி அமைதியாகவே இருப்பதை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
உண்ணாவிரத முடிவில் ரஜினி
இதனால் நதிநீர்இணைப்புக்காக உண்ணாவிரதம் இருந்தது போல விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரஜினி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உண்ணாவிரதப் போராட்டம் குறித்து திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் எங்கு எப்போது உண்ணாவிரதம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.