மே ஜூனில் கட்சியை அறிவிப்பார் ரஜினி.. திமுக, அதிமுக அதை வரவேற்கும்.. சொல்கிறார் கராத்தே!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மே- ஜூன் மாதம் இடையே தமது கட்சியை அறிவிப்பார் என்று அவரது தீவிர ஆதரவாளரும் சென்னை மாநகர முன்னாள் துணை மேயருமான கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
ரஜினிகாந்தின் ஆலோசகர்களில் ஒருவரான தமிழருவி மணியன், ஏப்ரல் 14-ந் தேதி ரஜினிகாந்த் கட்சியை தொடங்குவார்; ஆகஸ்ட் மாதம் மாநாடு நடத்துவார்; செப்டம்பரில் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அத்துடன் ரஜினிகாந்த் தலைமையிலான கூட்டணியில் பாமக நிச்சயம் சேரும்; மேலும் பல கட்சிகள் ரஜினிகாந்த் தலைமையிலான கூட்டணியில் இணையும் என்றும் தமிழருவி மணியன் கூறினார். அவரது இந்த பேட்டி தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளவருமான சென்னை மாநகர முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் ரஜினிகாந்தின் அரசியல் கட்சி குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில், மே - ஜூன் மாதம் இடையேதான் ரஜினிகாந்த் கட்சியை அறிவிப்பார். அதிமுக, திமுகவை ஆதரிப்பவர்கள் ரஜினிகாந்த் கட்சியை ஆதரிப்பார்கள் என கூறியுள்ளார்.