சந்தடி சாக்கில் ஜெயலலிதாவின் நிர்வாகத்திறமையை பாராட்டிய ரஜினி!
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையை பாராட்டி பேசினார்.
Recommended Video

தூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பின் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையை பாராட்டினார்.
விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற தூத்துக்குடிக்கு இன்று சென்றார். அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் கலவரம் போன்று இந்த மாதிரியான சம்பவம் இனி நடக்கக் கூடாது. கலவரத்தின் போது பொதுச் சொத்துக்களை எரித்தது மக்கள் கிடையாது.

இரும்புக்கரம் கொண்டு
இது சமூக விரோதிகளின் செயல், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து போராட்டத்தை திசை திருப்பியிருக்கின்றனர். சமூக விரோதிகளின் இத்தகைய செயல்களை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

ஜெ.வுக்கு ரஜினி பாராட்டு
அந்த விஷயத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறேன். அவர் சமூக விரோதிகளை அடக்கி வைத்திருந்தார். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

அதிமுகவினர் மகிழ்ச்சி
எத்தனையோ கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட போதும் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி பேசியிருப்பது அதிமுகவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம் தீர்வாகாது
மேலும் பேசிய ரஜினிகாந்த் தமிழகம் போராட்டக் களமாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் அடிக்கடி போராட்டம் நடக்கிறது. அனைத்திற்கும் போராட்டம் என்பதும் தீர்வாகாது. போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும்.

ராஜினாமா தீர்வல்ல
தூத்துக்குடியில் அசம்பாவிதம் நடந்தததற்கு உளவுத்துறை தான் பொறுப்பு. இது உளவுத்துறையின் தவறே.
எல்லாத்திற்கும் ராஜினாமா கேட்பது நியாயம் ஆகாது. எந்த பிரச்சினைக்கும் ராஜினாமா செய்வது என்பது தீர்வாகாது. இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.












Click it and Unblock the Notifications