ரஜினி மீண்டும் தில் பேச்சு.. அதிமுகவினரை தன் பக்கம் இழுக்கும் உத்தியா?
அதிமுகவை விமர்சித்து ரஜினி மீண்டும் ஒரு முறை தில்லாக பேசியிருக்கிறார்.
சென்னை: அதிமுகவை விமர்சனம் செய்து ரஜினி மீண்டும் ஒரு முறை தைரியமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், கருணாநிதியின் இறுதி சடங்கின்போது தமிழக ஆளுநர் முதல் பிற மாநிலத்து முதல்வர்கள் வரை, காங்கிரஸ் தலைவர் உள்ளிட்டோர் அங்கே நெடுநேரமாக காத்திருந்த போது அங்கே தமிழகத்தின் முதல் பிரஜை, முதலமைச்சர் வந்திருக்க வேண்டாமா.
இதை மற்ற மாநிலத்து தலைவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள். நீங்கள் எல்லாம் என்ன எம்ஜிஆரா , இல்லை ஜெயலலிதாவா. எதிரிகள் லிஸ்ட் எல்லாம் போய்விட்டது. ஜாம்பவான்கள் எல்லாம் அப்போது மோதினார்கள். இப்போது வேண்டாம் சரியா என்று ரஜினி பேசியுள்ளார்.

கோபத்தில் ரஜினி
அதிமுக அரசை விமர்சனம் செய்த போது ரஜினிகாந்த் கண்களில் கோபம் வெளிப்பட்டது. காமராஜர் பிறந்தநாளின்போது போயஸ் தோட்டத்தில் பேசிய ரஜினி, தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் திருப்தி அளிப்பதாக கூறி பாராட்டியிருந்தார். இந்நிலையில் கருணாநிதிக்காக அதிமுகவை அவர் தற்போது விமர்சனம் செய்துள்ளார்.

ஜெ.வை விமர்சித்த ரஜினி
கடந்த 1996-ஆம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பன் அமைச்சராக இருந்த போது ஆளும் கட்சியையே விமர்சனம் செய்தவர் ரஜினிகாந்த். மணிரத்னம் வீட்டில் குண்டு வெடித்த சம்பவம், ஆர்எம் வீரப்பனின் பதவியை பறித்த சம்பவம், திரைப்பட நகருக்கு ஜெ.ஜெ. திரைப்பட நகர் என பெயரிட்ட சம்பவங்களுக்கு ரஜினிஎதிர்ப்பு தெரிவித்தார்.

வாக்களிக்காதீர்
1996-ஆம் ஆண்டு ஒரு விழாவில் ரஜினி பேசுகையில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் இனி தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்றார். எனவே திமுக - தமாகா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது ரஜினி ஆளும்கட்சிக்கு எதிராக பேசியது அனல்பறந்ததை யாரும் மறக்க முடியாது. தற்போது எடப்பாடி அரசுக்கு எதிராக ரஜினி பேசியது 1996-ஆம் ஆண்டு சம்பவத்தை நினைவில் கொண்டு வந்து நிறுத்துகிறது.

அதிமுகவின் தலைவராகிறார்
அதிமுகவின் தலைவராக ரஜினி ஆகிறார் என்று தகவல்கள் வந்தன. மேலும் ரஜினி ரூபத்தில் தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கவும் அடுத்த தேர்தலில் மோடியே பிரதமராகவும் அமித்ஷா அதிமுகவின் தலைவராக ரஜினியை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சும்மா தான்
இந்நிலையில் எடப்பாடி அண்ட் கோ என்ன எம்ஜிஆரா இல்லை ஜெயலலிதாவா என்று ரஜினி கேட்டது, எடப்பாடியோ ஓபிஎஸ்ஸோ ஜெ.வின் அரசியல் வாரிசுகள் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுவதையே காட்டுகிறது. மேலும் அவர்கள் எல்லாம் சும்மா என்பதால் அதிமுக தொண்டர்கள் யாரும் அவர்களது பக்கம் நிற்க வேண்டாம் என்று தொண்டர்களை தன் பக்கம் ரஜினி இழுப்பது போல் உள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications