ரஜினி பேச்சை வரவேற்கிறோம், அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்: தமிழிசை
சென்னை: அரசியல் பிரவேசம் குறித்த நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சை வரவேற்கிறோம். அவர் மக்களுக்கு நல்லது செய்ய முன்வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழிசை கருத்து தெரிவிக்கையில், ரஜினியின் முடிவை வரவேற்கிறோம். அவர் தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும். சமூக சேவை குறித்த அவரது நகர்வு பாராட்டுக்குரியது.
இருப்பினும் அவர் தனி மனிதர் அல்ல. தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு பிரச்சினைகளுக்காக தவறாமல் குரல் கொடுத்து வரும், மக்கள் ஆதரவு பெற்ற நபர்.
பிரதமர் வாஜ்பாய் பதவிக்காலத்தின்போது ஆறுகளை இணைக்கும் திட்டத்திற்காக ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தவர் ரஜினிகாந்த். இதனால்தான் நாங்கள் பாஜகவுடன் இணைந்து ரஜினி செயல்பட வேண்டும் என்று கோரி வந்தோம்.
1996ம் ஆண்டு அவர் ஊழலுக்கு எதிராக தமிழகத்தில் குரல் கொடுத்தார். அவர் எங்களுடன் இணைந்தால் கட்சி பலம் பெறும். தமிழகத்திற்கும் நலன் பயக்கும் என்றார் தமிழிசை.