"சின்னப் பையன்".. இதை விட "பெரிய பையன்"களையெல்லாம் எப்படி சமாளிக்கப் போறீங்க ரஜினி சார்??
கொள்கை என்ன என்று கேட்ட நிருபரை, "சின்ன பையன்" என்று ரஜினி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை : கொள்கை என்ன என்று கேட்ட செய்தியாளரை, சின்னப் பையன் என்று வர்ணித்துள்ளார் ரஜினிகாந்த். சின்னப் பையன் கேட்டதுக்கு தலை சுற்றியவருக்கு, நாளை பெரிய பெரிய ஜாம்பவான்களின் கேள்விகள் என்னவெல்லாம் செய்யுமோ?
சென்னையில் நேற்று நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியை ஒரு பைசா செலவில்லாமல் தனக்கான அரசியல் கூட்ட மேடையாகவே மாற்றி விட்டார் ரஜினி. எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தவர், எம்ஜிஆரின் அரசியல் வாரிசு தான் தான் என்று அறிவிக்காத குறையாக தனக்கும் எம்ஜிஆருக்குமான உறவை பொதுமக்கள் மத்தியில் கூறினார்.
தனது திருமணம் தொடங்கி ராகவேந்திரா திருமண மண்டபம் வரை எம்ஜிஆர் எப்படி தன்னுடைய வாழ்க்கையில் முக்கிய பங்காற்றி இருக்கிறார் என்று கூறினார். இதோடு நிற்காமல் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒய்ஜிபி மனைவியிடம் கேளுங்கள், திருநாவுக்கரசிரடம் கேளுங்கள் என்று சாட்சிக்கு ஆட்களை வேறு இழுத்தார். அவர்களிடம் போய் கேட்டால் மறுப்பார்களா என்ன??
செய்தியாளரை விமர்சித்த ரஜினி
அதை விட முக்கியமானது செய்தியாளர்களை கிண்டலடித்தது. என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை டிசம்பர் 31ல் தெரிவிப்பேன் என்றேன், 29ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஒரு பத்திரிக்கையாளர், சின்ன பையன், அவர் என்னிடம் உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்றார். அது பற்றி ரசிகர்கள் மத்தியில் பேசிய போது கொள்கை என்னன்னு கேட்டது தலைசுத்திடுச்சுன்னு சொன்னதை வைத்து விவாதமே நடத்துகிறார்கள் என்று நேற்றைய பேச்சின் போது தெரிவித்தார்.
தெளிவுபடுத்த வேண்டியது கடமை
ஒரு பிரபலம் அரசியலுக்கு வருகிறார் என்றால் பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் கேள்விகள் கேட்பது, எதிர்பார்ப்பதை கேட்பது, எப்போது என்ன செய்யப் போகிறீர்கள் உங்களது கொள்கை என்ன, என்ன சாதிக்க வருகிறீர்கள், ஏன் வருகிறீர்கள், ஏன் முன்பே வரவில்லை என்றெல்லாம் கேட்பது இயல்பானது. ஆனால் அப்படிக் கேட்டதற்கு தலை சுத்திடுச்சு என்று கூறி விட்டு சவகாசமாக 3 மாதம் கழித்து தனது பதிலை நியாயப்படுத்தும் விதமாக வினோதமான காரணத்தை இத்தனை நாட்கள் கழித்து விளக்கியிருக்கிறார் ரஜினி.
ஜாம்பவான்களை எப்படி சமாளிக்கப்போகிறார்?
இதோடு நின்றுவிடாமல் கேள்வி கேட்டவரை சின்னப் பையன் என்றும் நக்கலடித்துள்ளார். தனது வயதை கருத்தில் கொண்டு ரஜினி கண்ணுக்கு அந்த செய்தியாளர் சின்னப் பையனாக காட்சி அளித்திருப்பார் என்று கூட அதை எடுத்துக் கொள்வோம். ஆனால் நாளை பெரிய பெரிய ஜாம்பவான் பத்திரிக்கையாளர்கள் இதை விட கஷ்டமான கேள்விகளை கேட்டால் இவர் எப்படி சமாளிப்பார். ஒரு சின்னப் பையனையே சமாளிக்க முடியாமல் தலை சுற்றினால் நாளை தமிழகத்தின் பெரிய பெரிய பிரச்சினைகளை எப்படி இவர் சமாளிப்பார், சரிக்கட்டுவார்.
எதுவும் கேட்கக் கூடாதா?
அல்லது மக்கள் இவர் என்ன புதிதாக செய்துவிடப் போகிறார் என்று கேட்டால் அதை எப்படி சமாளிப்பார். பத்திரிகையாளர்கள் கேள்வியே கேட்கக் கூடாது என்று சொல்ல வருகி்றாரா அல்லது நான் ஏதாவது செய்வேன். அதை வேடிக்கை மட்டும் பாருங்கள், கேள்வியெல்லாம் கேட்டு என்னை தலை சுற்ற வைக்காதீர்கள் என்று சொல்ல வருகிறாரா. என்னவோ போங்க சார், ஒன்னுமே புரியலை.