ரஜினி தொடங்கும் கட்சியின் பொதுச்செயலாளர் ராஜூ மகாலிங்கம்?
ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியின் பொதுச்செயலாளராக லைக்கா மாஜி அதிகாரி ராஜூ மகாலிங்கம் நியமிக்கப்பட உள்ளார்.
Recommended Video
சென்னை: ரஜினிகாந்த் மக்கள் மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள லைக்கா முன்னாள் அதிகாரி ராஜூ மகாலிங்கமே புதிய கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கினாலும் அந்த கட்சியின் கணக்கு வழக்குகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது கார்ப்பரேட் நிறுவனம்.
ரஜினி கட்சி பொதுச்செயலாளர்
ரஜினிகாந்தை களமிறக்கும் டெல்லியின் முடிவை கச்சிதமாக செயல்படுத்த கார்ப்பரேட் நிறுவனம் வியூகம் வகுத்து செயல்படுகிறது. இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக ராஜூ மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜூ மகாலிங்கத்துக்கு முக்கியத்துவம் ஏன்?
தற்போது ரஜினிகாந்த் தொடங்கப் போகும் புதிய கட்சியின் பொதுச்செயலாளராகவும் ராஜூ மகாலிங்கமே இருப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு வேளை அரசியலில் ரஜினி கரை சேராமல் போனால் யாரோ முகம் தெரியாத ரசிகர் மன்ற நிர்வாகியிடம் கட்சியை ஒப்படைப்பதற்கு பதில் தங்களது கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும் என்பதற்காவே ராஜூ மகாலிங்கத்தை பொதுச்செயலாளராக்குகிறார்களாம்.
ரசிக்காத ரசிகர்கள்
ரஜினி ரசிகர்களைப் பொறுத்தவரையில் காலந்தோறும் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வது; கட்சியே தொடங்கினாலும் அடிமட்ட தொண்டனாகத்தான் இருக்க முடியும் என்கிற நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. இதனை தீவிர ரசிகர்கள் ரசிக்கவில்லையாம்.
அதிருப்தியை சமாளிப்பாரா ரஜினி?
இத்தனை ஆண்டுகாலம் காத்திருந்தோம்.. இப்போது கட்சியிலும் நமக்கான பொறுப்புகளை யார் யாரையோ நியமிக்கிறார்களே என்கிற ஆதங்கம் இப்போதே வெளிப்பட தொடங்கியுள்ளது. இந்த அதிருப்தியை ரஜினிகாந்த் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதுதான் எதிர்பார்ப்பு.