முடிந்தவரை கொள்ளையடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டது அதிமுக: ராமதாஸ்
கோவை : தேர்தல் காலத்தில் காசு கொடுத்து ஓட்டு வாங்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து விட்டார்கள். அதனால்தான் மக்களை பற்றி கவலைப்படாமல் கொள்ளை அடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர் என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் மாவட்ட பொதுக் குழுக்கூட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தி வருகிறது. அதன்படி, கோவையில் இன்று பா.ம.க பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.

அதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "தமிழக அரசு செயல்பாடின்றி கிடக்கிறது. தமிழகத்தில் அரசு இருக்கிறதா? முதல்வர் இருக்கிறாரா என்றே தெரியாத நிலைதான் இருக்கிறது. சென்னை மிதக்கிறது.
கடலூர் போன்ற மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு பாதிப்புகள் நடந்த போதும் வெள்ள நிவாரண பணிகள் எதுவும் நடக்கவில்லை. மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். குறைந்த பட்சம் ஜெயலலிதா ஹெலிகாப்டரிலாவது போய் வெள்ள பாதிப்புகளை பார்க்க வேண்டும் என தொடர்ந்து சொல்லி வருகிறேன்.
ஆட்சியாளர்களுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. ஆட்சி முடியப்போகிறது. இன்னும் 4,5 மாதங்களுக்கு முடிந்தளவு ஊழல் செய்து கொள்ளலாம், கொள்ளை அடிக்கலாம் என நினைத்து அதில் தான் கவனமும் செலுத்தி வருகிறார்கள்.
இனிமேல் தேர்தல் நேரத்தில் காசு கொடுத்து ஓட்டு வாங்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து விட்டார்கள். அதனால் தான் மக்களை பற்றிக் கவலைப்படாமல் கொள்ளை அடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். பெட்ரோல் டீசல், விலை தற்போது உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications