காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அத்தனை பெரிய கடினமான செயலா?: பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அத்தனை பெரிய கடினமான செயலா என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைக்க முடியாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து இருப்பது வேதனை அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பேச்சு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களில் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று கட்கரி கூறியிருப்பது அவரது கடமையை தட்டிக்கழிக்கும் செயலாகும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க முடியாது என்பதற்காக அமைச்சர் கூறும் எந்த காரணங்களையும் ஏற்க முடியாது. மேலாண்மை வாரியம் அமைப்பது அமைச்சர் கூறுவது போன்று அவ்வளவு கடினமான பணி அல்ல.
மேலாண்மை வாரியத்தின் அதிகாரங்கள் என்னென்ன? என்பதை நடுவர் மன்றம் வரையறுத்துள்ளது. சுருக்கமாகக் கூறினால் பக்ரா- பியாஸ் வாரியத்தின் நகலாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று நடுவர் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமர் மோடியுடன் வலியுறுத்துவதற்காக, இனியும் காத்திருக்காமல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு உடனடியாக டெல்லி செல்ல வேண்டும்.
அங்கு பிரதமரிடம் வலியுறுத்துவதுடன் கடமை முடிந்து விட்டதாக நினைக்காமல், அங்கேயே முகாமிட்டு அனைத்து அறப்போராட்ட வழிமுறைகளையும் பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு தான் தமிழகம் திரும்ப வேண்டும். இந்த முயற்சிக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications