அரசு சிமெண்ட் ஆலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு நிலுவையை வழங்கிட ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: அரசு சிமெண்ட் ஆலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க மறுப்பது சரியல்ல. அனைத்துத் தொழிலாளர்களும் தீபஒளி திருநாளை கொண்டாட வசதியாக அவர்களுக்கான ஊதிய உயர்வு நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் அரியலூர் சிமெண்ட் ஆலை, ஆலங்குளம் சிமெண்ட் ஆலை, ஆலங்குளம் கல்நார் தகடு ஆலை, விருத்தாசலம் கற்குழாய் ஆலை ஆகிய 4 ஆலைகள் செயல்படுகின்றன.

இவற்றில் 480 நிரந்தரப் தொழிலாளர்களும், 590 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் நிரந்தர ஊழியர்களுக்கும், நாடு முழுவதும் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை தொழிலாளர்களுக்கும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது.
சிமெண்ட் ஆலை தொழிற் சங்கங்களுக்கும் நிர்வாகங்களுக்கு இடையே 2011-ம் ஆண்டு கையெழுத்தான ஊதிய ஒப்பந்தம் 31.03.2014 அன்று முடிவுக்கு வந்த நிலையில், 01.04.2014 முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால், உடன்பாடு எட்டப்படுவதில் தாமதமானதால் இரு தரப்புக்கும் இடையிலான புதிய ஊதிய ஒப்பந்தம் 29.07.2015 அன்று தான் மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு ஊழியருக்கும் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.3000 வீதமும், 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.3000 வீதமும் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். புதிய ஊதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வர வேண்டிய நாள் முதல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாள் வரையிலான 16 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை இரு கட்டங்களாக வழங்க வேண்டும்.
30.09.2015-க்குள் முதல் 8 மாத நிலுவைத் தொகையையும், 29.02.2016-க்குள் அடுத்த 8 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு கடைசி 4 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகை மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.
சிமெண்ட் ஆலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க மறுப்பது சரியல்ல. அனைத்துத் தொழிலாளர்களும் தீபஒளி திருநாளை கொண்டாட வசதியாக அவர்களுக்கான ஊதிய உயர்வு நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், ஆலைகளில் பணியாற்றும் 590 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications