அன்புமணியை வெல்ல வைத்த தர்மபுரி வாக்காளர்களுக்கு ராமதாஸ் பெரிய நன்றி...!
சென்னை: பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸை வெற்றி பெறச் செய்த தர்மபுரி வாக்காளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியுடன் நன்றி கூறுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மொத்தம் 5 பத்திகள் கொண்ட அவரது அறிக்கையில், 4 பத்திகளில் தர்மபுரி வெற்றிக்கு நன்றி கூறியுள்ளார். கடைசி பத்தியில், பாமக போட்டியிட்ட பிற தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லியுள்ளார்.
இதுதொடர்பான ராமதாஸின் அறிக்கை...
மகிழ்ச்சி தரும் தர்மபுரி வெற்றி
தமிழ்நாட்டில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் 77 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பாமக போட்டியிட்ட மற்ற தொகுதிகளின் முடிவுகள் மன நிறைவளிக்கும் வகையில் இல்லாவிட்டாலும், தர்மபுரி தொகுதி முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது.
தர்மபுரியில் மட்டும் வெள்ளம்
தேர்தலின் போது தமிழகத்தின் மற்ற தொகுதிகளில் பணம் ஆறாக ஓடியது என்றால், தர்மபுரியில் மட்டும் வெள்ளமாக பாய்ந்தது. பாமகவின் வெற்றிக்கு அணை போட அதிமுக முயன்றாலும், அவை அனைத்தையும் முறியடித்து அன்புமணி ராமதாசுவை வெற்றி பெறச் செய்த தர்மபுரி தொகுதி வாக்காளர்களுக்கு எந்த வகையில் நன்றிக்கடன் செலுத்துவது என்றே தெரியவில்லை.
இரும்புக் கோட்டையாச்சே
கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்தே தர்மபுரி தொகுதி மக்கள் பாமகவுக்கு ஆதரவாகவே இருந்து வந்திருக்கிறார்கள். தர்மபுரி மக்களையும், பாமகவையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என்பதும், தர்மபுரி தொகுதி பாமகவின் இரும்புக் கோட்டை என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது.
நன்றிக்கடன் செலுத்துவோம்
அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியிருக்கும் தர்மபுரி மாவட்டத்தை தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக மாற்றுவோம் என்று தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி, பாமக மீது தர்மபுரி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம்; நன்றிக்கடன் செலுத்துவோம் என்று கூறி தர்மபுரி தொகுதி வாக்காளர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுக்கும் நன்றி வாக்காளர்களே...
கிருஷ்ணகிரி, சிதம்பரம், ஆரணி, அரக்கோணம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய தொகுதிகளிலும் பாமகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், அவர்களின் நம்பிக்கையை முழுமையாக பெறும் வகையில், இனிவரும் காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சி பணியாற்றும் என்றும் வாக்குறுதி அளிக்கிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.