ரேசன் கடைகளில் குடும்பத்திற்கு 2 கிலோ பருப்பு வழங்குக: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
நியாய விலைக்கடைகள் மூலம் குடும்பத்திற்குத் தலா 2 கிலோ பருப்பு வழங்கவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் துயருக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், இதைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் தமிழக அரசு உறங்குவது கண்டிக்கத்தக்கது.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் விலை உயர்வால் பல உணவகங்களில் சாம்பார் பறிமாறப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. இட்லி, வடைகள், சாப்பாடு ஆகியவற்றின் விலை ரூ.10 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக எண்ணெய் வகைகளின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால், இவ்விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பருப்பு வகைகளின் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள சுமையிலிருந்து மக்களைக் காக்கவும், விலையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. எனவே,வெளிச்சந்தையில் பருப்பு விலை குறையும் வரை நியாயவிலைக் கடைகளில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதம் தலா 2 கிலோ துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு வழங்க அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, மலிவு விலை பருப்பு வகைகள் விற்பனைத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications