வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 5000 பணமும், வேட்டி, சேலையும் போதுமா... ராமதாஸ் அதிருப்தி
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் போதுமானதல்ல என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்த உதவிகள் பெரும் ஏமாற்றத்தைத் தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:

ஏமாற்றம் தருகிறது
தமிழ்நாட்டில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை அரசு அறிவித்திருக்கிறது. வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த நிவாரண உதவி யானைப் பசிக்கு சோளப்பொறி என்பதை விட மிகவும் குறைவாகும். இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

வரலாறு காணாத பேரழிவு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ. 5,000, ரூ.10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை ஆகியவை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழை என்பது வரலாறு காணாத இயற்கைப் பேரழிவு ஆகும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தரைத்தளங்களில் உள்ள வீடுகளில் இருந்த பர்னிச்சர்கள், குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன.

லட்சக்கணக்கில் சேதம்
கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமடைந்துள்ளன. அது மட்டுமின்றி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் இழந்த வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு இழப்பு ஆகியவற்றின் குறைந்தபட்ச மதிப்பு மட்டும் ரூ.25 ஆயிரத்திற்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு தான் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால் தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.5,000 நிவாரண உதவி என்பது மிக மிகக் குறைவான தொகையாகும்.

போதுமானதல்ல
வெள்ளத்தில் குடிசைகளை இழந்த குடும்பங்களுக்கு இத்துடன் குடிசைக்காக ரூ.5,000 சேர்த்து மொத்தம் ரூ.10,000, ரூ.10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதுவும் போதுமானதல்ல.

புதுச்சேரி அரசு பரவாயில்லையே
தமிழகத்துடன் ஒப்பிடும்போது புதுவையில் மழை பாதிப்பு மிகவும் குறைவாகும். எனினும், அங்கு குடிசைகளுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ரூ.10,000 மட்டும் தான் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது போதுமானதல்ல. அதுமட்டுமின்றி, குடிசைகளை இழந்த மக்களுக்கு ஒக்கியம் துரைப்பக்கம், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஆபத்தான அறிவிப்பு
இது மிகவும் ஆபத்தான அறிவிப்பாகும். கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய ஆற்றங்கரைகளில் குடிசைகளில் வசிக்கும் 10,000 குடும்பங்களை வெள்ள பாதிப்புகளை காரணம் காட்டி சென்னைக்கு வெளியே அனுப்பும் சதித் திட்டம் இதுவாகும். இந்த ஆறுகளின் கரைகளில் வாழும் மக்களை வெளியேற்ற கடந்த சில ஆண்டுகளாக காரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அரசு இப்போது வெள்ளத்தைக் காரணம் காட்டி அவர்களை அப்புறப்படுத்த முயல்கிறது. இதனால் அந்த மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்படுவார்கள். எனவே, இந்த திட்டத்தை கைவிட்டு அவர்கள் இப்போது வசிக்கும் பகுதிகளிலேயே அரசு வீடு கட்டித் தர வேண்டும்.

ஆடு, மாடுகளுக்கு கூடுதல் நிவாரணம் தேவை
வெள்ளத்தில் சிக்கி இறந்த மாடுகளுக்கு ரூ. 30,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாதாரண மாடுகளுக்கு இது போதுமானது என்றாலும் உயர்வகை மாடுகளுக்கு போதுமானது அல்ல. இந்த வகை மாடுகளுக்கு ரூ.50,000 வழங்க வேண்டும். அதேபோல், ஆடுகள் மற்றும் பன்றிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடு போதுமானது அல்ல என்பதால் அதை ரூ.5000 ஆகவும், கோழிக்கான இழப்பீட்டை ரூ.250 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். அது தான் நியாயமானதாக இருக்கும்.

நெல்லுக்கும் கூடுதலாக்குங்கள்
நெல்லுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏக்கருக்கு ரூ.5400 மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய ரூ.74,039 செலவாகும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கணக்கிட்டிருக்கிறது. ஆனால், அதில் ஆறில் ஒரு பங்கை மட்டும் இழப்பீடாக வழங்குவது முறையல்ல. கரும்பு போன்ற நீண்டகால பயிர்களை சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.2.07 லட்சம் செலவாகும் என வேளாண்மை பல்கலைக்கழகம் மதிப்பிட்டுள்ள நிலையில், வெறும் ரூ.18,000 இழப்பீடு வழங்குவது விவசாயத்தையும், விவசாயிகளையும் சிறுமைப்படுத்தும் செயலாகும்.

பிச்சை போல தருவதா
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்காமல் பிச்சைப் போடுவதைப் போல நிதி உதவி வழங்க அரசு முன்வந்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ.25,000 வீதமும், கரும்பு, வாழை ஆகியவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.75,000 வீதமும் இழப்பீடு தர அரசு முன்வர வேண்டும். அப்போது தான் உழவுத் தொழிலை காக்க முடியும்.

கணக்கெடுக்கு தாமதம் கூடாது
பொதுமக்கள் மற்றும் மற்றும் விவசாயிகளுக்கான இழப்பீட்டை கணக்கெடுப்பு என்ற பெயரில் தாமதம் செய்யக்கூடாது. அடுத்த சில நாட்களில் கணக்கெடுப்பை முடித்து, மக்களின் கோரிக் கைப்படி திருத்தப்பட்ட நிவாரண உதவிகளை இம்மாத இறுதிக்குள் தமிழக அரசு வழங்கி முடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications