மீனவர்களை சுட்டுக் கொல்வதாக கொக்கரிப்பதா?: ரணிலுக்கு ராமதாஸ், வேல்முருகன் கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்று கூறியுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

'இந்திய-இலங்கை உறவு குறித்து டெல்லி தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்த இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் நுழைந்தால் அவர்களை சுட்டுக் கொல்லும் உரிமை சிங்களக் கடற்படைக்கு உண்டு என்று கூறியுள்ளார். இலங்கைப் பிரதமரின் இந்தக் கருத்து மனிதத் தன்மையற்றது என்பது மட்டுமின்றி கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

இலங்கைப் பிரதமர் இவ்வாறு கூறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் ஒரு தமிழ்த் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வோம் என்று மிரட்டும் தொனியில் கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இவ்வாறு பேசியதற்காக இலங்கை சென்ற தம்மிடம் விக்கிரமசிங்கே மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த 9 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அடுத்த ஒரு வாரத்திற்குள், அதிலும் குறிப்பாக இந்தியப் பிரதமர் இலங்கைப் பயணத்தை முடித்துத் திரும்பிய இரு நாட்களில், ரனில் விக்கிரமசிங்கே இவ்வாறு கூறியிருப்பதைப் பார்க்கும்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறதோ? என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது.

இந்திய-இலங்கை மீனவர் பிரச்னை துப்பாக்கி முனையில் தீர்வு காணப்பட வேண்டிய விஷயம் அல்ல. இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் பரப்பு மிகவும் குறுகியது. ராமேஸ்வரம் பகுதியிலிருந்து 12 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடல் எல்லை வந்துவிடும். ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் தான் விசைப்படகுகள் மீன்பிடிக்க முடியும் என்பதால் பல நேரங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளும் நுழைவது தவிர்க்க முடியாதது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எந்த அளவுக்கு கைது செய்யப்பட்டு இருக்கிறார்களோ, அதில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இலங்கை மீனவர்களும் இந்திய கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்ற புள்ளிவிவரமே இதை உணர்த்தும்.

இவ்வளவு சிக்கலான மீனவர்கள் பிரச்னைக்கு பேச்சுக்களின் மூலம் தான் தீர்வு காண முடியும். இதை உணர்ந்ததால் தான் இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடிப்பது குறித்த சிக்கலுக்கு தீர்வு காண பேச்சு நடத்தி வருகின்றனர். இந்தப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதையடுத்து வெகுவிரைவில் அடுத்தகட்ட பேச்சுக்கள் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுட்டுக் கொல்வோம் என்று விக்கிரமசிங்கே கூறியிருப்பது வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைப்பதற்கு சமமானதாகும். இது அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது.

Ramadoss, Velmurugan condemn Ranil Wickramasinghe’s remarks on TN fishermen

டெல்லியில் 22.01.2013 அன்று நடந்த இந்திய-இலங்கை கூட்டு ஆணையத்தின் 8வது கூட்டத்தில், ''சர்வதேச எல்லைப்பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பான சம்பவங்களை குறைத்துக் கொள்ள இரு நாடுகளும் உறுதி பூண்டிருக்கின்றன. எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது எந்த காலத்திலும் தாக்குதல் நடத்தக் கூடாது. அனைத்து மீனவர்களையும் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்" என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆம் தேதி ரணில் விக்கிரமசிங்கேவும், சுஷ்மாவும் கொழும்பில் நடத்தியப் பேச்சுக்களின்போதும், மீனவர்கள் பிரச்னையை மனிதாபிமானத்துடன் பேச்சு நடத்தி தீர்ப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை மீறும் வகையில், ரணில் செயல்படுவது இனப் படுகொலைக்களத்தின் எல்லையை வங்கக்கடலுக்கும் விரிவுபடுத்துவதாக அமைந்துவிடும்.

தமிழக மீனவர்கள் மட்டுமே இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதில்லை; இலங்கை மீனவர்களும் தமிழக கடல் எல்லைக்குள் நுழைகின்றனர். இதைத் தடுக்க மீனவர்களை துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்வது தான் தீர்வு என்று நினைத்தால், வங்கக்கடல் செங்கடலாக மாறிவிடும் ஆபத்துள்ளது. இதை உணர்ந்து இதுபோன்று பொறுப்பின்றி பேசுவதை விடுத்து, இருதரப்பு மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ரனில் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் இதுபோன்ற சீண்டல்களைத் தொடர்ந்தால் ரணில் விக்கிரமசிங்கே போன்ற இலங்கைத் தலைவர்களை கட்டுப்படுத்த எதை செய்ய வேண்டுமோ, அதை செய்ய மத்திய அரசு தயங்கக் கூடாது.

இவ்வாறு ராமதாஸ் கூறி உள்ளார்.

வேல்முருகன்

இதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்தால் சுட்டுக் கொல்வோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் கொக்கரித்திருப்பது தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

அண்மைக்காலமாக தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே இத்தகைய கொலைவெறிக் கருத்தை வெளிப்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்கு முன்னர் இதேபோல் ரணில் விக்கிரமசிங்கே கருத்து தெரிவித்த போது, இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவரிடம் விளக்கம் கேட்டதாகவும் அவர் வருத்தம் தெரிவித்ததாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையிலும் இதே கருத்தை சுஷ்மா ஸ்வராஜ் பதிவு செய்தார். ஆனாலும் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் அதே கொலைவெறித்தனத்தோடு இந்திய ஆங்கில ஊடகத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

இப்போதும் மத்திய அரசு மவுனமாக இருக்கப் போகிறதா? இப்போதும் இந்திய நாட்டின் குடிமக்களாகிய தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்ற ரணிலின் அறிவிப்புக்கு சப்பைக் கட்டு காரணத்தை மத்திய அரசு சொல்லப் போகிறதா?

ரணிலின் இந்த கருத்தைக் கண்டிக்கும் வகையில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை அழைத்து மத்திய அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டும்;

அத்துடன் தமிழக மீனவர்களை படுகொலை செய்த இலங்கை அரசு மீது மத்திய அரசு வழக்குத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும்.

இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறப்போவதில்லை; இலங்கையின் இத்தகைய இனவெறிப் போக்குக்கு சரியான பாடம் கற்பிக்க தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட "இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்" என்ற தீர்மானத்தை மத்திய அரசு இனியாவது ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு வேல்முருகன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+