ராமஜெயம் கொலை வழக்கு: பரபரப்பான சிபிசிஐடி விசாரணை.. நாளை கிளைமேக்ஸ்
திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் கொலையாளிகளை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிகிறது. அதற்குள் சி.பி.சி.ஐ.டி போலீசார் குற்றவாளிகளை கைது செய்து விடுவார்களா? அல்லது மேலும் அவகாசம் கேட்பார்களா?. ஒருவேளை அவகாசம் கேட்கும் பட்சத்தில், கொலை வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா என்ற பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழக காவல்நிலையம் எத்தனையோ கடுமையான வழக்குகளை சந்தித்துள்ளது. பல சிக்கலான வழக்குகளை கூட எளிதாக கையாண்டு குற்றவாளிகளை கைது செய்திருக்கின்றனர் தமிழக போலீசார். ஆனால் ராமஜெயம் கொலை வழக்கில்தான் இத்தனை திணறல்.
திருச்சி திமுகவின் அதிகார வர்க்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் அன்றைக்கும் இன்றைக்கும் திமுகவினருக்கு எம்.டிதான். தொழில் அதிபராக வலம் வந்த அவரின் வாழ்க்கை ஒரே நாளில் திசைமாறிப்போனது என்னவோ உண்மைதான்.

ராமஜெயம் படுகொலை
தில்லைநகரில் வசித்து வந்த ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி அதிகாலையில் வாக்கிங் சென்ற போது கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார் என்பதுதான் இந்த நிமிடம் வரை நம்பப்படுகிறது.

குரூர கொலை
ராமஜெயத்தின் உடல் திருச்சி திருவளர்ச்சோலை அருகே கை, கால்கள் டேப் மற்றும் கட்டு கம்பிகளால் கட்டப்பட்ட நிலையிலும், வாயில் துணி வைத்து அடைத்தபடியும் போர்வைகளால் சுற்றப்பட்டும் கோரமாக கிடந்தது. அந்த நிலையைப் பார்த்தால் அது அதிகாலையில் கடத்தி கொலை செய்யப்பட்டது போலவே தெரியவில்லை என்பதுதான் பலரும் எழுப்பும் சந்தேகம்.

விலகாத மர்மம்
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கை முதலில் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரித்தனர். அதன்பின் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. ஆனாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது கொலை வழக்கு.

விடை தெரியாத புதிர்
ஸ்காட்லாண்டு போலீஸாருக்கு இணையாக வர்ணிக்கப்படுகிறது தமிழக காவல்துறை. ஆனால் ராமஜெயத்தின் கொலைக்கான காரணத்தைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. ராமஜெயம் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? அவரை கொலை செய்த கொலையாளிகள் யார்? என இதுவரை விடை கிடைக்கவில்லை.

சி.பி.ஐ விசாரணை தேவை
‘உண்மைகளை வெளிக்கொண்டுவர, 'வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும், போலீஸாரின் காலதாமதத்தால் தங்களுக்கு நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கை இழந்துவிட்டோம்' என்று உயர்நீதிமன்றத்தை அணுகினார் ராமஜெயத்தின் மனைவி லதா.

அவகாசம் கேட்டதுதான் மிச்சம்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் துரிதமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய அறிவுறுத்தி இருந்தனர். ஆனாலும் கொலையாளிகளை கண்டுபிடிக்க மாறி மாறி அவகாசம் கேட்டனர் சி.பி.சி.ஐ.டி போலீசார்.

ஜூலை 24 கெடு
கடந்த ஜூன் மாதம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், கடுமையான உத்தரவை பிறப்பித்தனர். அதில் ஜூலை மாதம் 24ம்தேதிக்குள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கெடு விதித்தனர்.

நெருங்கும் கிளைமேக்ஸ்
உயர்நீதிமன்ற மதுரைக்கிறை விதித்த கெடு நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஒரு துணை சூப்பிரண்டு தலைமையில் 12 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 205 பேரிடம் விசாரித்து உள்ளனராம் போலீசார்.

ரகசிய விசாரணை
கடந்த 40 நாட்களாக விசாரணையை தீவிரப்படுத்திய சி.பி.சி.ஐ.டி போலீசார் தங்களது பணியை ரகசியமாக செய்து கொண்டு இருக்கின்றனர்.
அரசியல்வாதிகள், ரவுடிகள், தொழில் அதிபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரித்து குற்றவாளிகளை நெருங்கிவிட்டார்களாம்.

சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு?
கெடுவிற்குள் கொலையாளிகளை கைது செய்துவிட்டாலும், இதுவரை விசாரித்ததை அறிக்கையாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்களாம். மேலும் கால அவகாசம் கேட்டவும் திட்டமிட்டுள்ளார்களாம் சி.பி.சி.ஐ.டி போலீசார். அந்த அறிக்கையை நீதிபதிகள் பார்வையிட்டு மேலும் கால அவகாசம் வழங்குவார்களா? அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவார்களா? என்பது 24ம் தேதி தான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications