ராமநாதபுரம் அருகே மே. வங்கத்தினர் வந்த சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்தது - 5 பேர் பரிதாப பலி
ராமநாதபுரம்: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வந்த சுற்றுலாப் பேருந்து ராமநாதபுரம் அருகே தீப்பிடித்து எரிந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிருடன் கருகி பிணமானார்கள்.
மேற்கு வங்க மாநிலம், பங்கூரா மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 60 பேர் தமிழகத்துக்கு ஒரு ஆம்னி பேருந்தில் சுற்றுலா வந்தனர். நேற்று மாலை அவர்கள் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர். பின்னர் கன்னியாகுமரிக்கு புறப்பட்டனர். ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் திருப்புல்லானி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென ஓடும் பேருந்தில் தீப்பிடித்தது. தீ மள மள வென பேருந்து முழுவதும் பரவியது. இதனால் அந்த பேருந்தில் இருந்தவர்கள் அலறி துடித்தனர். தகவல் அறிந்த ராமநாதபுரம் தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனாலும் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் பேருந்தில் இருந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாயினர்.
11 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். உடனே அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்தில் சமையல் செய்தபோது கேஸ் சிலிண்டர் வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
நன்றி: சி.ஜே. மதன்












Click it and Unblock the Notifications