ராமேஸ்வரத்தில் பயங்கர சூறாவளி- மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் - பாம்பன் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆனால் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கடல் அலைகள் மிக உயரத்தில் எழுந்து பெரும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் விசைப்படகுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.
பாம்பன் பாலத்தில்,ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் கோவிலுக்கும் பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இன்னும் 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவும், சூறாவளி காற்றும் வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறது.
சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முதல் தூரல் மழையே பெய்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.