ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதம் அறிவிப்பு!
ராமேஸ்வரம்: மீனவர்கள் மீது நடைபெறும் தொடர் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தக் கோரியும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரியும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நாளைமுதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து செல்வது, அவர்களை தாக்கி பொருட்களை சேதப்படுத்துவது போன்ற செயலை கண்டித்தும் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது வேலைநிறுத்தம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது.
இந்த நிலையில் நாளைமுதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு- பாண்டிச்சேரி மீனவ கூட்டமைப்பு தலைவர் போஸ், கூறியதாவது:
''தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்குவது தொடர்கதையாக உள்ளது. பலமுறை மத்திய, மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இலங்கை கடற்படையினர் தங்களது நடவடிக்கையை நிறுத்தவில்லை.
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள், படகு மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்து இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்க வழிவகை செய்ய வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (12-ந்தேதி) முதல் தங்கச்சிமடம் வலசை தெருவில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.
இதன்பிறகும் அரசு காலம்தாழ்த்தினால் தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் குதிப்போம்''என்று கூறினார்.












Click it and Unblock the Notifications