பெண் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் நிகழ்ந்த அதே நாளில் மரணித்த ராம்குமார்
சென்னை : திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மர்மமரணம் அடைந்த அதே நாளில் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த ஜூன் 24ம் தேதி சுவாதி என்பவர் கொலை செய்யப்பட்டார். சுவாதி கொலை வழக்கில் ஜூலை 1ம் தேதி நெல்லையில் ராம்குமார் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் விசாரணை சிறை எண் 2ல் அடைக்கப்பட்டு இருந்தார் ராம்குமார். ராம்குமார் இன்று காலை சிற்றுண்டி சாப்பிட்டுள்ளார். மதிய உணவுக்கு அனைவரும் சென்ற பின்னரும் ராம்குமார் செல்லவில்லை.
இந்த நிலையில் அவர் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் கம்பியைக் கடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். சிறையில் ப்ளக் பாய்ண்ட்டில் வரும் வயரை பல்லால் கடித்து தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
சிறையில் முதலுதவி சிகிச்சை செய்துள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் , அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் ராம்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார்கள். மின்சாரத்தை தன் உடம்பில் ராம்குமார் பாய்த்துக்கொண்டதாகவும் சிறைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய விஷ்ணுபிரியா கடந்த ஆண்டு இதே நாளில் செப்டம்பர் 18ம் தேதி, திருச்செங்கோடு டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். டிஎஸ்பி விஷ்ணுப்ரியாவின் மர்ம மரணம் குறித்த காரணங்கள்தான் இதுவரை வெளியுலகுக்குத் தெரியாத மர்மமாகவே நீடித்து வருகிறது.
ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலையான வழக்கு. இந்த வழக்கினை விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா இந்த வழக்கை விசாரித்து வந்தார். இந்த நிலையில்தான் விஷ்ணுப்ரியா மர்மமான முறையில் மரணமடைந்தார்.
உயரதிகாரிகள் நெருக்கடி காரணமாகவே விஷ்ணுப்ரியா தற்கொலை செய்து கொண்டார் என அவரது தோழி கீழக்கரை டி.எஸ்.பி.யாக இருந்த மகேஸ்வரி, வழக்குரைஞர் மாளவியா ஆகியோர் குற்றம்சாட்டினார். இதனையடுத்து, டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கோடு, பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கையும் சிபிசிஐடி விசாரித்து வந்தது.
இந்நிலையில், விஷ்ணுப்ரியாவின் தந்தை ரவி, 'விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்' என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பிறகு, ரவி மேல்முறையீடு செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 'விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்' என உத்தரவிட்டது . இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
விஷ்ணுப்ரியா உயிரிழந்து இன்றோடு ஒரு வருடம் ஆன நிலையில் அவருடைய தந்தை ரவி என் மகள் பாதியில் போவாள் என்று எதிர்பார்க்கவில்லை. என் மகள் இறப்புக்கான காரணம் தெரிய வேண்டும். கடந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி 2.48 மணியில் இருந்து 5.30 மணி வரை என்ன நடந்தது? யார் பொறுப்பு? என்று தெரிய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இன்று விஷ்ணுப்பிரியா மரணம் நிகழ்ந்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் ராம்குமாரின் மர்ம மரணம் நிகழ்ந்துள்ளது.
விஷ்ணுப்பிரியா மரணமடைந்த அதே நாளில் அதே நேரத்தில் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.