சுவாதி கொலை வழக்கு.... ராம்குமாரின் சிறைக்காவல் மேலும் நீட்டிப்பு
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மென் பொறியாளர் சுவாதி. இந்தக் கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரைக் கைது செய்த போலீசார், அவரை சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
ஏற்கனவே, ராம்குமாரை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ராம்குமார்..
இதனிடையே நேற்று முன்தினம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ரகசியமாக அழைத்து வரப்பட்டார் ராம்குமார். அங்கு அவருக்கு தொண்டை காயத்திற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. கூடவே, ராம்குமாரின் ரத்தமாதிரியும் சேகரிக்கப்பட்டது.
மருத்துவமனையில் இருந்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமாரை அவரது வழக்கறிஞர் ராமராஜ் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "சுவாதியை கொலை செய்தது யார் என்பது குறித்து தெரியவந்துள்ளது. விரைவில் கொலையாளியை அறிவிப்பேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று எழும்பூர் 14-வது கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வீடியோ கான்பரன்சிங் மூலம் ராம்குமாரின் சிறைக்காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி ராம்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவில்லை.