சுவாதி கொலை வழக்கு.. ராம்குமாரை குற்றவாளியாக்க போலீஸ் முயற்சி - வக்கீல் ராம்ராஜ் பேட்டி
சென்னை: பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை குற்றவாளியாக மாற்ற காவல் துறை முயற்சி செய்து வருவதாக வழக்கறிஞர் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ந் தேதி பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார்.
ஆனால் ராம்குமார் உண்மையான குற்றவாளி இல்லை என்று அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையில் கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் மூலம் கொலையாளியை அடையாளம் காட்ட புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு இன்று நடந்தது.
இதையடுத்து புழல் மத்திய சிறையில் உள்ள ராம்குமாரை, வழக்கறிஞர் ராம்ராஜ் மற்றும் இரண்டு வழக்கறிஞர்கள் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராம்ராஜ் கூறுகையில், இந்த கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று ராம்குமார் கூறியதாக அவர் தெரிவித்தார். மேலும், ராம்குமார் மன அழுத்தத்தில் இருப்பதால் அவருக்கு போதிய சிகிச்சை அளிக்க மருத்துவர் குழு ஒன்றை ஏற்பாடு செய்யவேண்டும்.
ராம்குமாரின் புகைப்படத்தை வெளியிட்ட பின் அடையாள அணிவகுப்பு நடத்தியது சட்டவிரோதம் ராம்குமாரை சிக்க வைக்கும் ஒரே கண்ணோட்டத்துடன் காவல்துறை செயல்படுவதாகவும் அவரை குற்றவாளியாக மாற்றவும் காவல் துறை முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.