ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு ராம்குமார் மாற்றம்
சென்னை: சுவாதியை படுகொலை செய்த ராம்குமார் இன்று ராயப்பேட்டை மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜாமீன் கேட்டு ராம்குமார் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணையை 2 மாதத்தில் முடிக்க போலீசார் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியைக் கொடுரமாக கொலை செய்யப்பட்டார். 8 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இதனையடுத்து பாளையங்கோட்டை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பாளையங்கோட்டையிலிருந்து ஞாயிறன்று இரவு சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார். திங்கட்கிழமை காலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ராம்குமார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று அவரிடம் நேற்று விசாரணை நடத்திய எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கோபிநாத், ராம்குமாரை வரும் 18ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து, பொது வார்டில் இருந்து சிறை கைதிகளுக்கான வார்டுக்கு ராம்குமார் மாற்றப்பட்டார். ராம்குமாருக்கு பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறையில் அடைப்பதற்கு ஏற்ப ராம்குமாரின் உடல்நிலை இருப்பதாக மருத்துவக் குழு இன்று பிற்பகல் சான்றளித்தது.
இதனைத் தொடர்ந்து ராம்குமாரை மருத்துவமனையில் புழல் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச்சென்றனர். செய்தியாளர்கள் யாருக்கும் தெரியாமல் பின் வாசல் வழியாக யாருக்கும் தெரியாமல் ராம்குமாரை போலீசார் அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனர்.
சுவாதி கொலை வழக்கை இரண்டு மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ள போலீசார் அதற்கேற்ப துரிதகதியில் செயல்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இதனால் குற்றப்பத்திரிக்கை விரைவில் தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராம்குமார் சார்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சுவாதி கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் போலீசார் வேண்டும் என்றே தன்னை இந்த கொலை வழக்கில் சிக்க வைக்க முயற்சி செய்வதாகவும் ராம்குமார் அந்த மனுவில் ராம்குமார் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications