சினிமா ஆசை காட்டி கடத்தப்பட்ட ஆந்திரா சிறுமி திருச்சி கோர்ட்டில் ஆஜர்
திருச்சி: பாலியல் பலாத்கார வழக்கில் ஆந்திர சிறுமி திருச்சி கோர்ட்டில் ஆஜர் ஆனார். சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி சேலத்திற்கு கடத்தி வரப்பட்டார். பின்னர் அவரை திருச்சி செல்வ நகர் பகுதியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாகவும் கண்டோன்மெண்ட் போலீசுக்கு புகார்கள் வந்தன.
கைது செய்த போலீஸ்
இது தொடர்பாக கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபச்சார கும்பல் தலைவி ஆஷா(வயது 35), சக்திவேல்(38), பிரபு(34), பொன்.காமராஜ்(42), வங்காள தேசத்தை சேர்ந்த முகமது சபியுல்லா(30), தர்மர்(30), காவ்யா(40) டிரைவர் சிவா(24) ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது.
சிறையில் அடைப்பு
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வங்காளதேச வாலிபர் முகமது சபியுல்லா, காவ்யா ஆகிய இருவர் மட்டும் ஜாமீன் கிடைக்காததால் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மற்ற அனைவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
ஆந்திரா சிறுமி ஆஜர்
கடந்த மாதம் 17-ந் தேதி இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. மொத்தம் 38 பேர் சாட்சியம் அளித்து உள்ளனர். இந்நிலையில் திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்காக ஆந்திர சிறுமி ஆஜர் ஆனார்.
பலத்த பாதுகாப்புடன் 8 பேர்
குற்றம் சாட்டப்பட்ட ஆஷா, சக்திவேல், பொன்.காமராஜ் உள்பட 8 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். முகமது சபியுல்லா புழல் சிறையில் இருந்தும், காவ்யா கடலூர் சிறையில் இருந்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வந்து ஆஜர்படுத்தப்பட்டனர்.
வாக்குமூலம் பதிவு
அப்போது சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதிலை நீதிபதி ரகுமான் பதிவு செய்தார். இதனை தொடர்ந்து வழக்கறிஞர்கள் வாதம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications